ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் மிகவும் மோசமான இந்த தோல்வி  உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் உலக கிரிக்கெட்டில் வெள்ளை பந்து விளையாட்டில் இந்திய அணியை மிகவும் குறைவான செயல்பாட்டை கொண்ட அணி என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் விமரிசித்திருந்தார். மேலும் அவர், 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி உலக கிரிக்கெட் அரங்கில் செய்தது என்ன எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.  இந்த நிலையில் வாகன் விமர்சனத்திற்கு நியூசிலாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து கூறிய அவர், யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார்.



நியூசிலாந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹர்திக் பாண்டியாவிடம் வாகனின் கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, “நீங்கள் நன்றாகச் செய்லபடவில்லை என்றால் , ​​மக்கள் தங்கள் கருத்தைக் வெளிப்படுத்தத்தான் செய்வார்கள், ஒரு கிரிக்கெட் வீரராக அதை நாங்கள் மதிக்கிறோம். மேலும், மக்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதேபோல் நாங்கள் சர்வதேச அளவில் இருப்பதால், யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்” என அவர் கூறியுள்ளார். 

மேலும் கூறிய அவர் செய்தியாளர்களிடம்,  ”இது ஒரு விளையாட்டு, நீங்கள் தொடர்ந்து சிறப்பாக இருக்க முயற்சி செய்கிறீர்கள். இறுதியில் எது நடக்க வேண்டுமோ அது நடக்கும். அணியாக நாங்கள் வேலை செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளன. முன்னோக்கிச் செல்லும்போது நாங்கள் எங்கள் தவறுகளை சரிசெய்து வேலை செய்வோம்" என்று ஹர்திக் கூறியுள்ளார்.  டி20 உலகக் கோப்பையில் அணியாகவும் தனி வீரராகவும் எங்கள் ஓவ்வொருவருக்கும் ஏமாற்றம் உள்ளது. உலகக் கோப்பை கற்றுத் தந்திருக்கும் பாடத்தில் இருந்து எங்களை சிறப்பாகச் செயல்படவும்,  செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் பார்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளது. உலகக் கோப்பை அணியில் முக்கிய வீரர்கள் இல்லை, ஆனால் நம்மிடம் உள்ள திறமை உள்ளது. ஏற்கனவே அணியில் இருக்கும் வீரர்கள், ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தியாவுக்காக விளையாடி வருவதால், சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை வெளிப்படுத்த அவர்களுக்கு போதுமான நேரம் கிடைத்துள்ளதாகவே கருதுகிறேன் என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


ஹர்திக் பாண்டியா தலைமையிலான  இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக செய்யப்படவுள்ள ஹர்திக் பாண்டியாவே இனி இந்திய டி20 அணியை வழிநடத்துவது பொருத்தமாக இருக்கும் என முன்னாள் இந்திய அணி வீரர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.