லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோற்றது என்ற வேதனை காட்டிலும், விராட்கோலி மீண்டும் ஒரு முறை  ஏமாற்றிவிட்டார் என்பதே ரசிகர்களுக்கு வேதனையாகும். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அவரது அத்தனை சாதனைகளையும் முறியடிக்க ஒருவரால் முடியும் என்று உலக கிரிக்கெட்  ஜாம்பவான்களால் வியந்து பார்க்கப்பட்ட ஒரே கிரிக்கெட் வீரர் நமது விராட்கோலி.


ஆனால், கடந்த 2 ஆண்டுகாலமாகவே அவருக்கு போதாத காலமாக உள்ளது. சகட்டுமேனிக்கு சதங்களை விளாசி வந்த விராட்கோலி இன்று ரன்கள் எடுக்கத் தடுமாறுவதைப் பார்ப்பது அவரது ஒவ்வொரு ரசிகருக்கும் அளவு கடந்த வலியை ஏற்படுத்துகிறதே என்பதே உண்மை. அதுவும் கேப்டன்சியில் இருந்து அவர் விலகிய பிறகு அவரது ஆட்டம் என்பது சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.




2008ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட்கோலி, 2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தான் ஆடிய ஒவ்வொரு ஆண்டும் ஒருநாள் போட்டிகளில் சதங்களை விளாசித்தள்ளியுள்ளார். கொரோனா தொற்றால் உலகம் பாதிக்கப்பட்ட 2020ம் ஆண்டு முதல் அவருக்கும் சதத்திற்கும் இடைவெளி விழத்தொடங்கியது. அந்தாண்டு விராட்கோலி 9 போட்டிகளில் ஆடி 5 அரைசதங்கள் விளாசி 431 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர், அந்தாண்டு கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை.


2021ம் ஆண்டு 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி 129 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவற்றில் 2 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார். 2022ம் ஆண்டான நடப்பாண்டில் இதுவரை விராட்கோலி 7 ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளார். அதில் அவர் 158 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 65 ரன்களை எடுத்துள்ளார்.


ரன் மெஷினாக, கவர்டிரைவின் அரசனாக திகழும் விராட்கோலி சமீபகாலமாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்திய அணிக்கே பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.




33 வயதான விராட்கோலி ஒருநாள் போட்டியில் 43 சதங்களையும், 64 அரைசதங்களையும், டெஸ்ட் போட்டியில் 27 சதங்களையும், 7 இரட்டை சதங்களையும், 28 அரைசதங்களையும் விளாசியவர் என்பதே அவரின் அபாரமான திறமைக்கு சான்றாகும்.


மூன்று வடிவ போட்டியிலும் உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் எப்போதும் விராட்கோலி முதன்மையானவராக திகழ்ந்து வருகிறார். சமீபகாலமாக அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் விரைவில் அவர் நாயகன் மீண்டும் வர்றான் என்பது போல அதியற்புதமான தனது இன்னிங்சை வெளிப்படுத்துவார் என்று உறுதியாக நம்பலாம்.




விராட்கோலி 2008ம் ஆண்டு 159 ரன்களையும், 2010ம் ஆண்டு 325 ரன்களையும், 2010ம் ஆண்டு 995 ரன்களையும் விளாசினார். அதற்கு அடுத்தபடியாக 2011ம் ஆண்டு 1381 ரன்களையும், 2012ம் ஆண்டு 1026 ரன்களையும், 2013ம் ஆண்டு 1268 ரன்களையும், 2014ம் ஆண்டு 1054 ரன்களையும் என வரிசையாக நான்கு ஆண்டுகள் 1000 ரன்களுக்கு மேல் விளாசினார். 2015ம் ஆண்டு 623 ரன்களையும், 2016ம் ஆண்டு 739 ரன்களையும் அடித்தார். பின்னர், மீண்டு வந்த கோலி 2017ம் ஆண்டு 1460 ரன்களையும், 2018ம் ஆண்டு 1202 ரன்களையும், 2019ம் ஆண்டு 1377 ரன்களையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண