ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலககோப்பை டி20 போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு யார் செல்லப் போகிறார்கள் என்பதற்கான அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கியது.


முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணியும், இரண்டாவது அரையிறுதில் இந்தியா – இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சிட்னி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.


அந்த வகையில் இன்றைய ஆட்டத்திலும் நியூசிலாந்து வெற்றி பெறுமா என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். முன்னதாக, சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் கடந்த மாதம் 22ம் தேதி ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.


இதையடுத்து, முதலில் பேட்டிங்கை செய்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களைக் குவித்தது. அந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் கான்வே 58 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார்.  ஃபின் ஆலென் 42 ரன்களை விளாசினார்.


201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 111 ரன்களில் சுருண்டது. அவ்வாறாக, நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் முதலாவது ஆட்டத்திலேயே வெற்றியுடன் தொடங்க நியூசிலாந்துக்கு உதவியது சிட்னி மைதானம்.


சிட்னி மைதானத்தில் வெற்றிக் கணக்கைத் தொடங்கிய கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, மறுபடியும் அதே சிட்னி மைதானத்தில் கடந்த மாதம் 29ம் தேதி இலங்கை அணியை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.


இதையடுத்து, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களைச் சேர்ந்தது.


அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபின் ஆலென், விக்கெட் கீப்பர் கான்வே, கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர். கிலென் ஃபிலிப்ஸைத் தவிர மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். ஃபிலிப்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.


168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது.






பேட்டிங்கில் சொதப்பினாலும் டிரென்ட் போல்ட், இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் அசாத்திய பந்துவீச்சால் இலங்கை அணி நிலைகுலையச் செய்தது நியூசிலாந்து. இப்படி நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ராசியான மைதானமாக சிட்னி மைதானம் நியூசிலாந்துக்கு மாறியுள்ளது.




PAK vs NZ Semi-final Live: பாக்., உடன் முதலாவது அரையிறுதி ஆட்டம்-டாஸ் வென்று நியூசி., பேட்டிங்


முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை எதிர்கொண்டுள்ளது நியூசிலாந்து.
இந்த ஆட்டமும் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நடப்பு தொடரில் இதற்கு முன்பு இரண்டு ஆட்டங்களிலும்  நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ததால், இந்த முறையும் அந்த அணி வெல்லும் என்று நம்பி பேட்டிங்கை தேர்வு செய்திருக்கக் கூடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். 


சிட்னி மைதானம் மீண்டும் நியூசிலாந்துக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.