டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் அமெரிக்கா சென்றுள்ளன. டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளுக்கும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றது. இந்திய அணி நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்றது.


அத்துமீறி நுழைந்த ரசிகர்:


இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 182 ரன்களை குவித்தது. இதையடுத்து, 183 ரன்கள் என்ற இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி வீரர்கள் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, அப்போது ரசிகர் ஒருவர் திடீரென பாதுகாப்பு விதிகளை மீறி மைதானத்தின் உள்ளே நுழைந்தார்.


உள்ளே நுழைந்த ரசிகர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை நோக்கி ஓடி, அவருடன் கைகொடுக்க முயற்சி செய்தார். ரோகித்சர்மாவும் அவருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். பாதுகாப்பு காரணங்கள் என்பதால் அமெரிக்க போலீசார் சட்டென்று மைதானத்தின் உள்ளே நுழைந்து, அந்த ரசிகரை கீழே தள்ளி அவரது இரண்டு கைகளையும் பின்னால் கட்டி கைது செய்தனர்.


அமெரிக்க போலீசுக்கு வேண்டுகோள் விடுத்த ரோகித்சர்மா:


அமெரிக்காவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவரை கீழே தள்ளி கைது செய்வது போல, அந்த ரசிகரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இதைக்கண்ட ரோகித் சர்மா அவரை அவ்வாறு நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், அமெரிக்க போலீசார் பாதுகாப்பு காரணம் என்பதால் அந்த ரசிகரை சட்டென்று கைது செய்தனர்.






பின்னர், போட்டி நடுவர்களும் உள்ளே வந்து அமெரிக்க போலீசாரிடம் கூறி அந்த ரசிகரை அழைத்துச் சென்றனர். அமெரிக்காவில் முதன்முறையாக டி20 உலகக்கோப்பைத் தொடர் நடைபெறுவதாலும், பல முன்னணி கிரிக்கெட் அணிகள் பங்கேற்பதாலும் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.


இந்தியா வெற்றி:


இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, கேப்டன் ரோகித் சர்மா 19 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து அசத்தினார். ரிஷப்பண்ட் 32 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸர் அடித்து 53 ரன்கள் அடித்து அசத்தினார். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 23 பந்தகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்து அசத்தினார்.


இதைத்தொடர்ந்து 183 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணி இந்திய பந்துவீச்சில் தடுமாறியது. தொடக்க வீரர் சவுமியா சர்கார் டக் அவுட்டானார். லிட்டன் தாஸ் 6 ரன்னில் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரர் தன்ஷித் ஹாசன் 17 ரன்களில் அவுட்டானார். கேப்டன் ஷான்டோவும் டக் அவுட்டானார்.


அனுபவ வீரர்கள் ஷகிப் அல் ஹசன் – மகமுதுல்லா வங்கதேச அணிக்காக அபாரமாக ஆடினர். ஷகிப் அல் ஹசன் 28 ரன்களில் அவுட்டானார். மகமதுல்லா 28 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 40 ரன்களுக்கு ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். 20 ஓவர்களில் வங்கதேச அணி வெறும் 122 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 


இந்திய அணியில் அர்ஷ்தீப்சிங், ஷிவம்துபே தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா, முகமது சிராஜ், பாண்ட்யா, அக்‌ஷர் படேல், தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.