இந்திய அணி அடுத்த மாதம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து செல்கிறது. இந்த தொடரில் பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் ஆகியோர் ரெஸ்ட் எடுக்கலாம். 


ஹர்திக் பாண்டியா இல்லாததால் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருப்பார் என பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன்மூலம், சர்வதேச டி20 போட்டியில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், அயர்லாந்து எதிரான தொடரில் இந்திய அணிக்கு பொறுப்பேற்க உள்ளார். டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்ததில் இருந்து, சூர்யா தான் அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார். அப்படிப்பட்ட நிலையில் ஹர்திக் இல்லாத நிலையில் சூர்யா கேப்டனாக கருதப்படுகிறார். இருப்பினும், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக இருப்பார் என்று முன்னதாக பல தகவல்கள் கூறுகின்றன.


ஹர்திக் மற்றும் கில்லுக்கு ஓய்வா..?


ஆகஸ்ட் 18 முதல் அயர்லாந்துக்கு எதிராக டீம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வரும் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பையைக் கருத்தில் கொண்டு அயர்லாந்துக்கு எதிரான தொடரில் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன .


இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரம் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா எப்படி விளையாடுகிறார்..? அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறதா என்பதைப் பொறுத்தே ஓய்வு குறித்து அறிவிக்கப்படும். தொடர்ந்து, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாட இருப்பதால் அவரது பணிச்சுமையை கருத்தில்கொண்டு ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது.. எப்படியிருந்தாலும், உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியாதான் துணை கேப்டனாகவும் இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். 


அயர்லாந்து தொடர்:


இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆகஸ்ட் 18 முதல் 23 வரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்குப் பிறகு, 2023 ஆசிய கோப்பை ஆகஸ்ட் 30 முதல் தொடங்குகிறது. அயர்லாந்துக்கு எதிரான தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியில் அங்கம் வகிக்கும் இந்த வீரர்களில் பெரும்பாலானோர் அங்கு இருக்கலாம். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது