ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சூர்யகுமாருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சனை இறங்குவது பற்றி நிர்வாகம் சிந்திக்கலாம் என்று முன்னாள் இந்திய பேட்டர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.


ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முழுப் போட்டியிலும் ஒரு கணம் கூட இந்திய அணி கை ஓங்கவில்லை. இந்த பிட்ச் வேகபந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால், ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக செயல்பட்டது. சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு கோல்டன் டக் அவுட் ஆனார்.


T20I போட்டிகளில் அதிரடி மன்னராக திகழ்பவர் இம்முறையும் மிட்செல் ஸ்டார்க் வேகத்திற்கு இரையானார். அவர் இரண்டு ஒருநாள் போட்டிகளிலுமே சூர்யகுமாரை குறிவைத்து தூக்கியுள்ளார். தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு, பல கிரிக்கெட் வல்லுநர்கள் ODI வடிவத்தில் அவரது நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்புவதால், அணியில் சூர்யகுமாரின் இடம் ஆபத்தில் உள்ளது.



இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாமா?


இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சூர்யகுமாருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சனை இறங்குவது பற்றி நிர்வாகம் சிந்திக்கலாம் என்று முன்னாள் இந்திய பேட்டர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார், "சூர்யகுமார் யாதவ் எதிர்கொண்ட முதல் பந்து 145 கிமி வேகத்தில் வந்ததால் நாம் அவருக்கு அனுதாபம் காட்டலாம். ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் பந்தை உள்ளே கொண்டு வர முயற்சிக்கும்போது அதனை எதிர்கொள்வது சவாலானது என்பதில் சந்தேகமில்லை. மீண்டும், மிட்செல் ஸ்டார்க் பந்துவீசும்போது அவர் அதனை எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர் ஸ்டம்பைத் தாக்கி பந்தை ஸ்விங் செய்வார் என்று அவருக்கும் தெரியும்" என்று வாசிம் ஜாஃபர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: அதிகாலை 1 மணிவரை வீடியோ கேம்: சரியான பாடம் புகட்டிய தந்தை: கதறி அழுது மனம் மாறிய மகன் - நடந்தது என்ன?


சஞ்சு சாம்சன் நல்ல வீரர்


"மூன்றாவது ஒருநாள் போட்டியில் நிர்வாகம் அவரை களமிறக்குகிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும், இல்லையெனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுப்பது கரு நல்ல தீர்வாக இருக்கும், ஏனெனில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் நன்றாக விளையாடியுள்ளார். மற்றும் அவர் ஒரு நல்ல வீரர்," என்று அவர் மேலும் கூறினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான T20I தொடரின் போது சஞ்சு தனது கடைசி ஆட்டத்தை இந்தியாவுக்காக விளையாடினார், அங்கு தொடரின் இரண்டாவது போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.



இந்தியா படுதோல்வி


இரண்டாவது ஒருநாள் போட்டியில், மிட்செல் ஸ்டார்க்கின் 5-53 மற்றும் மிட்செல் மார்ஷின் அபாரமான 66 ரன்களால் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஞாயிற்றுக்கிழமை தொடரை 1-1 என சமன் செய்ய உதவியது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க், விசாகப்பட்டினத்தில் 26 ஓவர்களில் எதிரணியை 117 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரது வேகம் மற்றும் ஸ்விங் மூலம் இந்திய பேட்டிங்கைத் திணறடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் (51) மற்றும் மார்ஷ் ஆகியோர்11 ஓவர்களில் இந்திய பந்துவீச்சைப் அக்கக்காக பிரித்து போட்டியை வென்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை ஒரு ஆட்டம் மீதமுள்ள நிலையில் சமன் செய்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி, தொடர் தோல்வியிலிருந்து மீண்டது.