ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி தொடங்கியது.


ஆசியக்கோப்பை கிரிக்கெட்:


ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. 


தற்போது, தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ள நிலையில், இந்தியாவுடன் இறுதி போட்டியில் பலபரீட்சை நடத்தப்போவது யார் என்ற கேள்விக்கான பதில் இன்று தெரிந்துவிடும். பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்று போட்டியில் யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்களே இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.


கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றிலேயே இந்தியா வெளியேறிய நிலையில், இந்த முறை இறுதி போட்டி வரை தகுதிபெற்றுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் அணியுடன் அபார வெற்றி இலங்கை அணியுடன் போராடி வெற்றி என தொடர் முழுவதுமே இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.


இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளபோவது யார்?


இப்படியிருக்க பலம் வாய்ந்த இந்தியா அணியை இறுதி போட்டியில் எதிர்த்து களம் காணப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்றைய போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணி, இன்றைய போட்டியில் வெற்றிபெற்று இந்தியா அணியை பழி தீர்க்கும் முனைப்பில் களம் காண உள்ளது.


அதேபோல, கடைசி போட்டியில் இந்தியா அணிக்கு நெருக்கடி தந்து, போராடி தோல்வி அடைந்த இலங்கை அணி இன்றைய போட்டியில் முழு நம்பிக்கையுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்றைய போட்டி மழையினால் பாதிக்கப்பட்டு ரத்தாகும் பட்சத்தில், தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேரும். இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்ததால் அவர்களின் நெட் ரன் ரேட் குறைவாக உள்ளது. அதேபோல, இன்றைய போட்டிக்கு ரிசர்வ் நாளும் அறிவிக்கப்படவில்லை.


கைப்பற்றிவிடும் முனைப்புடன் தொடரை தொடங்கிய பாகிஸ்தான், குரூப் ஏ போட்டியில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் அபார வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசியது. ஆனால், அந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. 


வங்கதேச அணிக்கு எதிராக அபார வெற்றிபெற்றிருந்தாலும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது. எனவே, இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் படிக்க: IND vs SL Asia Cup 2023: கடைசி விக்கெட் வரை திக்! திக்! இறுதியில் இலங்கை அணியை அலறவிட்ட இந்தியா.. 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி