Kumble : மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் மூன்று அணி மூன்று கேப்டன் என தனித்தனியாக நியமிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். 


இந்திய அணி சமீபகாலமாகவே பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியை வென்ற பின்னர் ஒரு சர்வதேச போட்டியில் கூட இந்திய அணி தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்ட பின்னர் தான் இந்திய அணி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. அதிலும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்ட பின்னரும் விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. 


விராட் கோலியின் பார்ம் அவுட் அவரை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவைத்தது. அதன் பின்னர் அணியின் முழுநேர கேப்டனாக அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டார். ரோகித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் இந்திய அணி டி20 ஆசிய கோப்பை போட்டித் தொடரிலும் மற்றும் டி20 உலககோப்பை போட்டியிலும் பங்கேற்றது. அதில் இரண்டிலும் இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை. இதனால் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர்  அணியை விமர்சித்து கருத்துக்கள் கூறினார். அவர் மறைமுகமாக ஒருசிலர் அணியில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என கூறியுள்ளார். 


இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே கூறியுள்ளதாவது, ”மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் மூன்று கேப்டன்கள் மற்றும் மூன்று அணிகள் நியமிக்கப்பட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.


மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ”இந்திய அணியின் மூன்று வடிவிலான (ஒருநாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி20) போட்டிகளுக்கும் ரோகித் ஷர்மா கேப்டனாக உள்ளார். ரோகித் ஷர்மா உட்பட, விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அனைத்து வித கிரிக்கெட்டிலும் விளையாடுகின்றனர். இந்நிலையில் டெஸ்ட் மற்றும் வெள்ளை நிற பந்து போட்டிகளான டி20, ஒருநாள் போட்டிக்கு தனித் தனி கேப்டன் மற்றும் தனித்தனி அணிகளை நியமிக்க வேண்டும். இந்திய அணிக்கு தனித்தனி அணிகள் மிகவும் முக்கியம். குறிப்பாக டி20 போட்டிகளுக்கு அதற்குரிய பிரத்யோகமான வீரர்கள் தேவை. தற்போது இங்கிலாந்து அணி அப்படித்தான் உள்ளது. குறிப்பாக அணியில் அதிக ஆல் ரவுண்டர்கள் இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக பேட்டிங் ஆல் ரவுண்டர்கள் மிகவும் முக்கியம்.  2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிகூட அப்படித்தான் இருந்தது.


இங்கிலாந்து அணியில் 7வது வீரராக லியாம் லிவிங்ஸ்டனும், ஆஸ்திரேலியாவில் 6 வரிசையில் மார்க்ஸ் ஸ்டோனிஸ் களம் இறங்குகிறார். மற்ற அணியில் இவ்வளவு தரமான வீரர்கள் இந்த வரிசையில் களம் இறங்குவதைப் பார்க்க முடியாது. இது போன்று ஒவ்வொரு அணியையும் நாம் உருவாக்க வேண்டும். அத்தகைய வீரர்களை தேடிப்பிடித்து அணியில் சேர்க்க வேண்டும்” இவ்வாறு அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.