ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு, இந்திய டி20 கிரிக்கெட் தொடர்களில் எம்எஸ் தோனிக்கு இயக்குனராக பதவி வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. பிசிசிஐயின் தகவல்களின்படி, இந்திய கிரிக்கெட்டில் நிரந்தரப் பாத்திரத்திற்காக தோனியை அழைக்க குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. 


வெளியான தகவலின்படி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 3 வடிவிலான கிரிக்கெட் அணியிலும் பயிற்சியாளராக இருந்து வருவதால், அவரது பணி சுமை அதிகமாக உள்ளதாக பிசிசிஐ கருதுகிறது. இதனால், பயிற்சியாளர்கள் பதவிகளை பிரிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. அதன் அடிப்படையில், முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியை டி20 வடிவத்தில் மட்டும் இயக்குனராக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தோனியின் திறமைகளை பயன்படுத்தி இந்திய கிரிக்கெட் அணியின் தரத்தை உயர்த்தவும், இளம் வீரர்களின் திறமையை வெளிகொண்டு வரலாம் என்று பிசிசிஐ நம்பிக்கை கொண்டுள்ளது. அறிக்கையின்படி, இந்த மாத இறுதியில் பிசிசிஐ தலைமை கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. 


எம்.எஸ்.தோனி : 


2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டி20 உலகக் கோப்பையின் போது தோனி இந்திய அணி ஆலோசகராக செயல்பட்டார். இருப்பினும் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறியது. அது ஒரு வார காலமே என்றாலும், மீண்டும் தோனியை இந்திய அணிக்காக களமிறக்கும் முயற்சி கைக்கூடும் என நம்பப்படுகிறது. 


அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்குப் பிறகு தோனி விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அவரது ஓய்வை சரியாக பயன்படுத்தி எதிர்கால இந்திய டி20 அணிக்கு பலம் சேர்க்கலாம் என்றும், டி20 வடிவத்தில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டால் இந்த கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக அமையும் என்றும் கருதுகின்றனர். 


பிசிசிஐ தலைமை கவுன்சில் கூட்டம் எப்போது?  பிசிசிஐ தலைமை கவுன்சில் கூட்டத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் வாரியத்தின் அதிகாரப்பூர்வ கூட்டம் இம்மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய முடிவுகள்:


கிரிக்கெட் ஆலோசனைக் குழு அமைப்பது, தேர்வுக் குழுவில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, 3 வடிவ பயிற்சியாளர்கள் நியமிப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.