இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக, 15 சீசன்களாக நடந்து வரும்  இந்திய ப்ரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டியைப் போல் தென் ஆப்பிரிக்காவிலும் நடத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியின் உரிமையாளர்களான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸின் உரிமையாளர்கள் தென்னாப்பிரிக்கா நாட்டில் நடைபெறவுள்ள புதிய உள்நாட்டு டி20 லீக் தொடரில் ஆறு அணிகளை வாங்கியுள்ளது. 


இந்த லீக் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்கா தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான சூப்பர்ஸ்போர்ட் உடன் இணைந்து நடத்துகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உரிமையாளரான இந்தியன் சிமெண்ட்ஸ், ஜோகன்னஸ்பர்க் உரிமையை கைப்பற்றியுள்ளது, மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் உரிமையை கைப்பற்றியுள்ளது.






அதேபோல், சன்ரைசர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சன் டிவி குழுமம், க்கெபெர்ஹா (முன்னர் போர்ட் எலிசபெத்) உரிமையை கைப்பற்றியுள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு இறுதியில் லக்னோ அணியின் ஐபிஎல் உரிமையை  7090 கோடி ரூபாய் செலுத்தி வாங்கிய ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழு டர்பன் அணியையும், அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் பார்ல் அணியை வாங்கியது.  மேலும், டெல்லி கேப்பிடல்ஸின் இணை உரிமையாளரான பார்த் ஜிண்டால் தலைமையிலான ஜிண்டால் சவுத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் கைப்பற்றியுள்ளது. 


இதைத்தொடர்ந்து ஒவ்வொரு அணியும் தங்கள் அணியின் அறிவிப்பை வெளியிட்டு வந்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸுக்குச் சொந்தமான MI கேப் டவுன் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள ஏலத்திற்கு முன்னதாக அவர்களின் பயிற்சிக் குழுவை அறிவித்தது.










ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சைமன் கட்டிச் தலைமைப் பயிற்சியாளராகவும், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஹசிம் ஆம்லா பேட்டிங் பயிற்சியாளராகவும் அணியில் இணைவார்கள் என்று மும்பை இந்தியன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல், நியூசிலாந்தின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜேம்ஸ் பாம்மென்ட் பீல்டிங் பயிற்சியாளராகவும், முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரும் உள்நாட்டு பயிற்சியாளருமான ராபின் பீட்டர்சன் அணியின் பொது மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.