பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அடுத்த ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி பிசிசிஐ செயலாளர் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுகிறது.


பிசிசிஐ அடுத்த தலைவர்:


வரும் நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த  கிரெக் பார்க்லே தான் ஐசிசி தலைவர் பதவியில் இருந்து வருகிறார். இச்சூழலில் தான் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஐசிசி தலைவருக்கான தேர்தலில் பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது ஐசிசி தலைவர் பதவிக்கு ஜெய் ஷா போட்டியிட விரும்பினால் அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதோடு ஐசிசி தலைவராக அவர் பொறுப்பிற்கு வந்தால் அடுத்த மூன்று ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார். மேலும் வரும் 2018 ஆம் ஆண்டு வரை பிசிசிஐ தலைவராகவும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.


ஐசிசி விதிகளின்படி, தலைவர் தேர்தலில் 16 வாக்குகள் உள்ளன, இப்போது வெற்றி பெற ஒன்பது வாக்குகள் (51%) தேவை. முன்னதாக, தலைவராக பதவியேற்பதற்கு, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்.இதில் 16 வாக்குகளும் ஜெய்ஷாவிற்கு கிடைக்கும் என்ற சூழல் தான் இருக்கிறது.


ஐசிசி தலைவராக ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டால் இளம் வயதில் ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை அடைவார். முன்னதாக கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா ஐ.சி.சி தேர்தலில் போட்டியிட்டால் பிசிசிஐ செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்படும்.  






இந்நிலையில் தான் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அடுத்த ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி பிசிசிஐ செயலாளர் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுகிறது. 


ரோஹன் ஜெட்லி யார்?


மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் தான் ரோஹன் ஜெட்லி.  இந்தியாவில் இருந்து சட்டமும், கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவர் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (DDCA) தற்போதைய தலைவராக இருக்கிறார். அதோடு அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ரோஹன் ஜெட்லியை மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.