இந்தியா - வங்கதேசம்:


இந்திய கிரிக்கெட் அணி நீண்ட இடைவேளைக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்தவகையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களம் இறங்குகிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. இதற்கான பயிற்சி முகாம் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மதிப்புமிக்க வீரர் யார்? அஸ்வின் சொன்ன பதில்:


இச்சூழலில் தற்போதைய சூழலில் மதிப்பு மிக்க வீரர் யார் என்பது தொடர்பாக அஸ்வின் பேசியுள்ளார். அதில், "இந்தியா எப்பொழுதும் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிகம் செலுத்தும் நாடாகவே இருந்து வருகிறது இது எப்பொழுதும் மாறும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நான் பும்ராவை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அவர் ஒரு தலைமுறையின் பந்துவீச்சாளர். அவரை இன்னும் கொண்டாட வேண்டும். சென்னைவாசிகளான நாங்கள் பந்துவீச்சாளர்களை மிகவும் பாராட்டக் கூடியவர்களாக இருக்கிறோம்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜஸ்ப்ரித் பும்ரா சென்னைக்கு வந்தார். ரஜினிக்கு கொடுக்கும் வரவேற்பை தமிழ் நாட்டில் அவருக்கு கொடுத்தோம். அவரை நாம் ஒரு சாம்பியன் ஆக நடத்த வேண்டும். நான் தனியாக பெயரிட விரும்பவில்லை, ஆனால் தற்பொழுது பும்ராதான் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர்"என்று கூறியுள்ளார் அஸ்வின்.


ஓய்வு எப்போது?


அதோடு தன்னுடைய ஓய்வு குறித்தும் பேசியிருக்கிறார் அஸ்வின். அதாவது,"அப்படியெல்லாம் என் மனசுல ஒண்ணும் இல்ல.. வயசானபிறகு ஒவ்வொரு நாளும் கூடுதல் முயற்சி பண்ண வேண்டியதால ஒரு நாள் மட்டும் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. அதெல்லாம் இல்ல.. நிறைய முயற்சி பண்ணிட்டேன். கடந்த 3-4 ஆண்டுகளில். நான் (ஓய்வு) முடிவு செய்யவில்லை, இதற்கு மேல் முன்னேற விரும்பவில்லை என்று நான் நினைக்கும் நாளில், நான் வெளியேறுவேன். அவ்வளவுதான்,"என்று கூறியிருக்கிறார்.


மேலும் படிக்க: Chess Olympiad 2024:"எங்க வந்து யாருகிட்ட".. செஸ் ஒலிம்பியாட்! 5வது சுற்றிலும் இந்தியா ஆதிக்கம்! மிரளும் வீரர்கள்


 


மேலும் படிக்க: KL Rahul: RCB-க்கு வரப்போறீங்களா? ரசிகர் கேட்ட கேள்வி! கே.எல்.ராகுல் கொடுத்த பதில்! வைரல் வீடியோ