டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி விளையாட்டை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியை,இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரித்துள்ள்ளார்.


பேஸ்பால் கிரிக்கெட்:


பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ”பேஸ்பால்” எனப்படும் அதிரடி விளையாட்டு முறையை பின்பற்றி வருகிறது. வழக்கமான டெஸ்ட் போட்டிகளை போன்று இல்லாமல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து, வெற்றி அல்லது தோல்வி என்ற இலக்குகளை மட்டுமே குறிவைத்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதேமுறையை பின்பற்றி பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதோடு, தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியின் இந்த புதிய முறையால் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையே மாற்றமடைந்து வருகிறது.


அஸ்வின் கருத்து:


இந்நிலையில், இங்கிலாந்து அணியின் பேஸ்பால் கிரிக்கெட் முறை குறித்து அஸ்வின் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அவர்,  இப்போது Bazball என்ற விளையாட்டுமுறை குறித்து பேசப்படுகிறது. இங்கிலாந்து அதிவேக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட பாணியிலான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள். ஆனால் சில வகையான விக்கெட்டுகளில், ஒவ்வொரு பந்தையும் அடிக்க முயற்சிக்கும் போது நீங்கள் ​​ தடுமாறுவீர்கள். இந்த அணுகுமுறையில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் உள்ளன.  ஆட்டம் முடிவடையும் போதுதான் இந்த அணுகுமுறை செயல்படுகிறதா இல்லையா என்பது நமக்கு தெரியும். சில நேரங்களில், விக்கெட்டில், நிபந்தனைகளை மதிக்க வேண்டும். நீங்கள் ஆடுகளத்தை மதித்து அதற்கேற்ப விளையாடினால், ஆடுகளமும் உங்களை மதிக்கும். நீங்கள் ஆடுகளத்தை மதிக்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு பலனைத் தரும்” என எச்சரித்துள்ளார்.


இந்தியா vs இங்கிலாந்து


கடைசியாக டெஸ்ட் தொடரில் இந்திய  அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய ஒரே அணி இங்கிலாந்து தான். அதன்படி, 2012-13ம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, தோனி தலைமையிலான இந்திய அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆனால், அதைதொடர்ந்து இரண்டு முறை இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி,  4-0 மற்றும் 3-1 என்ற கணக்கில் தொடர்களை இழந்தது.


இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம்:


நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதை முடித்ததும் வங்கதேச அணிக்கு செல்லும் அந்த அணி, ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்க உள்ளது. அதைதொடர்ந்து, நடப்பு  ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில்,  பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.