கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், 2009 ஆம் ஆண்டு இதயம் மற்றும் சிறுநீரகங்களில் ஏற்பட்ட கோளாறினல் இறந்ததாகக் கூறப்படும் அவரது மனைவி ஹுமா அக்ரம் சோகமான மரணம் குறித்து சமீபத்தில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.


வாசிம் அக்ரம் மனைவி:


வாசிம் அக்ரமின் மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது, ​​அவர் பாகிஸ்தானின் முக்கிய கிரிக்கெட் வீரராக  இருந்ததுடன் பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இருந்தார். அக்ரமின் மனைவி ஹுமா தனது 42வது வயதில் சென்னையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அவரது சுயசரிதை சுல்தான்: எ மெமோயர் பற்றிய விவாதத்தின் போது, ​​முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் தனது மறைந்த மனைவியைப் பற்றிய உணர்ச்சிகரமான விஷயத்தினை பகிர்ந்து கொண்டார். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அக்ரம் லாகூரிலிருந்து சிங்கப்பூருக்கு ஏர் ஆம்புலன்ஸில் தனது மனைவியுடன் இருந்தார். ஆம்புலன்ஸ் சென்னை விமான நிலையத்தில்  நிறுத்தப்பட்டது.


மறக்க முடியாத ஒன்று:


உணர்ச்சிகரமான சம்பவத்தை நினைவு கூர்ந்த அக்ரம், ஆம்புலன்ஸ் சென்னைக்கு வந்தபோது தன்னிடம் இந்திய விசா இல்லை என்பதை அப்போது வெளிப்படுத்தினார். "நான் எனது மனைவியுடன் சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்தேன், எரிபொருள் நிரப்புவதற்கு சென்னையில் விமானம் நிறுத்தப்பட்டது.  விமானம் தரையிறங்கியபோது, ​​​​எனது மனைவி மயக்கமடைந்தார், நான் அழுது கொண்டிருந்தேன், விமான நிலையத்தில் மக்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். எங்களுக்கு இந்திய விசா இல்லை. நாங்கள் இருவரும் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்தோம்" என்று அந்த பேட்டியில் அக்ரம் கூறினார்.


கடினமான சூழ்நிலையில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சென்னையில் உள்ள அதிகாரிகள் உதவியதை வெளிப்படுத்தி தனது நன்றியைத் தெரிவித்தார். “சென்னை விமான நிலையத்தில் உள்ளவர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் சுங்கத்துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகள் விசாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம், உங்கள் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார்கள். அது என்னால் மறக்க முடியாத ஒன்று. கிரிக்கெட் வீரராக என்பதை விடவும்  ஒரு மனிதனாக என்னை மிகவும் நெகிழவைத்த நிகழ்வு அதுதான்," என அக்ரம் மேலும் கூறினார்.


சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:


வாசிம் அக்ரமின் மனைவி ஹுமா அக்ரம், மாரடைப்பால் அப்பல்லோ மருத்துவமனையில்  காலமானார். பாகிஸ்தானில் உள்ள ஹிப்னோதெரபிஸ்ட் ஹூமா, லாகூரில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட ஏர் ஆம்புலன்ஸில், எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

மூளைக் காய்ச்சலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட 'தெரியாத காய்ச்சலுக்கு' அவர் சிகிச்சை பெற்றார். பல உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் அப்போது தெரிவித்தன. ஹூமா வென்டிலேட்டரில் இருந்தார். இரத்தம் உட்பட பல திசுக்களின் வீக்கம் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுத்தது என தெரிவிக்கப்பட்டது.  அப்பல்லோ மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் ரமேஷ் வெங்கடராமன், "மாரடைப்பு மற்றும் கடுமையான மூச்சுத்திணறல்" காரணங்களால் அவர் காலமானார் என்றார்.