இந்தியா நன்றாக உலகக்கோப்பையில் விளையாடி வந்தாலும் ஒரே ஒரு கவலைதான் திரும்ப திரும்ப மனதில் ஓடிக்கொண்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.


கே.எல்.ராகுல் குறித்து கவாஸ்கர்


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று வெற்றிகரமான துவக்கத்தை தந்துள்ளது. விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்றோர் திடமான பார்மில் உள்ளனர். இருப்பினும், ஒட்டுமொத்த செயல்திறனைப் பொருத்தவரை இந்திய அணியில் எல்லாம் சரியாக இருக்கிறதென்று சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். அவர் இந்தியா அரையிறுதிக்கு கண்டிப்பாக செல்லும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாரா? ஆனால் அவர் குறிப்பாக ஒரு வீரரைப் பற்றி கொஞ்சம் கவலைப்படுகிறார். அந்த வீரர் வேறு யாருமல்ல, தொடர்ந்து சொதப்பி வரும் தொடக்க வீரர் கேஎல் ராகுல் தான்.



கே.எல்.ராகுல் சொதப்பல்


போட்டியின் முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து, ராகுல் 13 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராகவோ அல்லது நெதர்லாந்திற்கு எதிராகவோ, கே.எல். ராகுல் அணிக்குத் தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கவாஸ்கர், இந்தியாவின் முதல் இரண்டு போட்டிகளை உன்னிப்பாக ஆய்வு செய்ததில் இருந்து, 'ராகுலின் பேட்டிங் மகிழ்ச்சியை தரவில்லை, ஆனால் அவர் மீண்டும் எழுச்சி பெற அவருக்கு ஆதரவளிக்கிறேன்,'என்றார்.


தொடர்புடைய செய்திகள்: சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் - திடீரென அறிவித்த கருணாஸ்..! நடந்தது என்ன..?


இந்தியாவின் செயல்பாடு குறித்து


"இந்தியா விளையாடும் விதத்தைப் பற்றி பேசுவோம். ரோஹித் ஷர்மா அரை சதம் பார்க்க மிகவும் நன்றாக இருந்தது. அவர் திட்டங்களை செயல்படுத்துவதில் அர்ஷ்தீப் என்னை ஈர்க்கிறார். அஷ்வின் மற்றும் அக்சர் படேல் முக்கியமான வேளைகளில் விக்கெட் எடுப்பது அணிக்கு அவசியமாக படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக விளையாடினார்கள்", என்று கவாஸ்கர் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.



கே.எல்.ராகுல்தான் ஒரே கவலை


மேலும் பேசிய அவர், "இப்போது ஒரே கவலை கே.எல். ராகுலைச் சுற்றி இருக்கிறது, அவர் இரண்டு போட்டிகளிலும் ரன்கள் குவிக்கவில்லை. ஆனால் அவரது திறனை குறை சொல்ல முடியாது, அவர் ஒரு கிளாசிக் பிளேயர்," என்று கூறினார். பாகிஸ்தானுக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பிறகு, இந்தியா நெதர்லாந்தை எளிதாக தோற்கடித்து இரண்டு வெற்றிகளைப் பெற்றது. மேலும் இன்று இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை மாலை 4.30 மணிக்கு எடுகிற்கொள்கிறது. இந்த போட்டியில் வென்றால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்த போட்டியில் கே.எல்.ராகுல் விமர்சனங்களுக்கு பேட்டால் பதில் சொல்வாரா என்று அனைவரும் எதிர் பார்த்து வருகின்றனர். இந்த போட்டியிலும் சொதப்பினால் இந்தியா ஓப்பனிங்கிற்கு வேறு வழியை தேடவேண்டிய நிலை வரலாம், எத்தனை நாள்தான் விராட் கோலி காப்பாற்றுவார் என்கிறார்கள் விமர்சகர்கள். பல முடிவுகளை தரப்போகும் இன்றைய போட்டியின் மீது எதிர்பார்ப்புகள் கூடி இருப்பதால், இதில் வென்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.