இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. கிழக்கு மண்டல அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த போது அப்போதைய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியின் கண்ணில் தோனி பட்டார். அந்தப் போட்டிகளில் அசத்தலாக ஒருவர் அதிக தலை முடியுடன் பந்தை எளிதாக சிக்சருக்கு விரட்டும் வீரராக இருந்தார். அதன்பின்னர் 2004ஆம் ஆண்டு தோனி இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். அதில் முதல் போட்டியில் சரியாக ரன் எடுக்கவில்லை. எனினும் அதன்பின்னர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் தன்னுடைய அதிரடியை அவர் வெளிகாட்டினார். 


அந்த இன்னிங்ஸ்களுக்கு பிறகு தோனி இந்திய அணியில் முக்கியமான நபராக மாறினார். 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி இந்திய அணி சென்னையில் இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியில் மகேந்திர சிங் தோனி அறிமுக வீரராக களமிறங்கினார். அப்போதே சென்னைக்கும் தோனிக்குமான பந்தம் தொடங்கியது. அந்தப் போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்தது. அதில் தோனி 7ஆவது வீரராக களமிறங்கி 54 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். 




மேலும் இந்திய அணி பந்துவீசிய போது ஒரு கேட்ச் பிடித்து அசத்தினார். அதன்பின்னர் தோனி இந்திய அணிக்காக 89 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதில் 4876 ரன்கள் அடித்தார். மேலும் இந்திய அணியின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராக அவர் வலம் வந்தார். கிட்டதட்ட 16 ஆண்டுகளுக்கு முன்பாக தோனிக்கும் சென்னைக்கும் தொடங்கிய பந்தம் தற்போதும் ஐபிஎல் மூலம் தொடர்ந்து வருகிறது. கிட்டதட்ட ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை அணி என்றாலே அது தோனி தான் என்று இருந்து வருகிறது.  






சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை அடுத்த மூன்று சீசன்களுக்கு 12 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது. ஆகவே சென்னையும் தோனியும் என்ற பந்தம் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற விழாவிலும் தோனி உருக்கமாக இது பற்றி கூறியுள்ளார். அவருடைய வாழ்நாளில் கடைசி கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் விளையாட உள்ளதாக உறுதி மொழியையும் அவர் கொடுத்துள்ளார். வந்தாரே வாழவைக்கும் சென்னை நம்முடைய தல தோனியையும் தன்னுடைய தத்துபிள்ளையாக எடுத்து என்றும் புகழின் உச்சியில் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: பஞ்சராகும் பஞ்சாப்... முக்கிய பொறுப்பில் இருந்து ஆண்டி ப்ளவர் விலகல்!