பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திங்களன்று ஐசிசியிடம் மிகவும் முக்கியமான விஷயம் குறித்து கேள்வி எழுப்பியது சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டது. அதாவது வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ள உலகக்கோப்பைத் தொடரில் கலந்து கொள்ள பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைக்கவில்லை என்பது தொடர்பான கேள்விதான் அது.


விசா தாமதம்:


விசா கிடைக்க தாமதமாவதால் உலகக்கோப்பைத் தொடருக்காக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதிலும், உலகக்கோப்பைக்கு  அணியாக தயாராவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.  இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் இருந்து விசா அனுமதிக்காக காத்திருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது.


செப்டம்பர் 27 ஆம் தேதி ஹைதராபாத் வருவதற்கு முன்னதாக துபாயில் பாகிஸ்தான் இரண்டு நாள் குழு பிணைப்பு அமர்வைக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் இந்தியா செல்வதற்காக  விசா இதுவரை கிடைக்காததால் தற்போது துபாய் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  செப்டம்பர் 29 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தொடங்கி ஹைதராபாத்தில் பாபர் அசாம் தலைமையிலான அணி இரண்டு பயிற்சி ஆட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து உலகக் கோப்பை போட்டிகளை விளையாடுகிறது. 


ஐ.சி.சி.க்கு கடிதம்:


ஐசிசி உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணிக்கான இந்திய விசாக்களைப் பெறுவதற்கும் அனுமதி பெறுவதற்கும்  தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானுடன் சமத்துவமற்ற முறையில் நடத்தப்படுவது குறித்த எங்கள் கவலைகளை எழுப்பி ஐசிசிக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தரப்பில்,  கடந்த வாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கான விசாக்கள் 24 மணி நேரத்திற்குள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது; ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. குறிப்பாக  இந்திய உள்துறை அமைச்சகம் என்ஓசி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 


பாகிஸ்தானுக்கு விசா:



ஐசிசி-இடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணிக்கான விசாவினை உடனடியாக வழங்கியுள்ளது இந்தியா. இதனால் பாகிஸ்தான் அணி நாளை அதாவது செப்டம்பர் 26ஆம் தேதி இந்தியாவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாகிஸ்தான் அணி வரும் 29ஆம் தேதி  நியூசிலாந்துக்கு எதிராகவும் அக்டோபர் 3ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ஹைதராபாத்தில் இரண்டு  பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது.


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து நேரடியாக ஐசிசிக்கு புகார் கடிதம் பறந்ததால், இந்திய கிரிக்கெட் வாரியம் துரிதமாக வேலை செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கான விசாவுக்கு ஏற்பாடு செய்தது. இதனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த விசா வழங்கப்பட்டது. 


இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரில் வரும் அக்டோபர் 14ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறுகிறது.


உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி : ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், உசாமா மிர், முகமது நவாஸ், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், முகமது வாசிம் ஜூனியர், ஹசன் அலி