நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 


இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் 6ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்தனர். அதன்பின்னர் 7ஆவது ஓவரில் இஷான் கிஷன் 29 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அதேபோல் ரிஷப் பண்ட்டும் 2 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது.






ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் மற்றொரு புறம் ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். அவர் 27 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகள் வரலாற்றில் 30ஆவது அரைசதம் கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் விராட் கோலியின் 29 அரைசதங்கள் என்ற சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். அரைசதம் கடந்த பிறகு ரோகித் சர்மா 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்த போது இஷ் சோதி வீசிய பந்தை நேராக அடித்தார். அந்தப் பந்தை நியூசிலாந்து வீரர் இஷ் சோதி லாவகமாக பிடித்தார். அவரின் கேட்சை பார்த்து பலரும் ட்விட்டரில் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பலரும் ஃபெவிகால் விளம்பரத்தை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 






மேலும் படிக்க: கடைசி வரைக்கும் ருதுராஜ் இல்லையே... ட்விட்டரில் வறுத்து எடுத்த ரசிகர்கள் !