இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை தான் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார். 


15வது உலகக்கோப்பை தொடர் வெற்றிகரமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி 8 ஆட்டங்களில் விளையாடி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த உலகக்கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி அசுர எழுச்சி கண்டுள்ளது. ஒருபக்கம் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க, மறுபக்கம் எதிரணிக்கு பந்து வீச்சாளர்கள் கடும் அச்சுறுத்தலாக உள்ளனர். 


இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பங்கு மிக முக்கியமானது. உலகக்கோப்பையில் அவர் சேர்க்கப்பட்டாலும் முதல் சில ஆட்டங்களில் சேர்க்கப்படவில்லை. இது மிகப்பெரிய சர்ச்சைகளை எழுப்பியது. இதனைத் தொடர்ந்து 4 ஆட்டங்களில் முகமது ஷமி விளையாடினார். அதில் முதல் 3 ஆட்டங்களில் மட்டும் 14 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். 4 போட்டிகளையும் சேர்த்து ஷமி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் கவலையே எழுந்துள்ளது. 






எல்லோரும் முகமது ஷமியை பாராட்டினாலும், அவரது முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், ‘ஷமியின் சிறப்பான ஆட்டத்துக்கு வாழ்த்து கூற முடியாது. அவர் நன்றாக ஆடினால் நிறைய பணம் கிடைக்கும். அதற்காக இந்திய அணி வெற்றி பெற வாழ்த்து கூறுகிறேன்’ என தெரிவித்திருந்தார். 
இந்த ஹாசினை தான் ஷமி 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் பிறந்த நிலையில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஷமியை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தவரை ஹாசின் ஜஹான் கடுமையாக விமர்சித்திருந்தார். 


இந்நிலையில் முகமது ஷமியை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார். இவர் ராம்தாஸ் அதவாலேவின் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியில் மகளிரணி துணை தலைவராக இருக்கிறார். ஷமியை போல பாயலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் தான். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட பாயல் கோஷ் அதில், ‘முகமது ஷமி நீங்கள் நன்றாக ஆங்கிலத்தில் பேசினால் உங்களை திருமணம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்தார். இது உண்மையாகவே பேசினாரா இல்லை காமெடிக்காக செய்தாரா என தெரியவில்லை. இந்த பதிவு கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டாலும் இப்போது தான் வைரலாகி வருகிறது.