டிஎன்பிஎல் மூன்றாவது போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி, சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.



முதல் இன்னிங்ஸ்:


சேலம் ஸ்பார்ட்டன்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் மற்றும் கவின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் இணைந்து 50 ரன்களை குவித்தனர். இந்த நிலையில், அபிஷேக் 18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் அலெக்சாண்டர் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இருப்பினும் மறுமுனையில் கவின் தனது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் கவின் 32 பந்துகளில் அதிரடி அரை சதம் அடித்தார். இது கவினின் முதல் டிஎன்பிஎல் அரை சதம் ஆகும்.


பின்னர் களமிறங்கிய விஷால் மற்றும் கவின் நிதானமாக விளையாடி சேலம் அணிக்கு ரன்களை சேர்த்தனர். இருப்பினும், மதுரை வீரர் ஸ்வப்னில் சிங் பந்து வீச்சில் கவின் 70 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் வீரர்கள் மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சேலம் ஸ்பார்ட்டன் அணியின் வீரர் விஷால் 28 பந்துகளில் அரை சதம் அடித்து விளாசினார்.


இதன் மூலம் தனது 4வது டிஎன்பிஎல் அரை சட்டத்தை அவர் பதிவு செய்தார். சிறப்பாக பந்து வீசிய மதுரை அணி வீரர் முருகன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். மதுரை வீரர் ஸ்வப்னில் சிங் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். இதன்மூலம் இரண்டு அரை சதங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 180 ரன்கள் குவித்தது. 



இரண்டாவது இன்னிங்ஸ்:


181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி முதல் மூன்று ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மதுரை அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் 7 பந்துகளின் 8 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் பொறுப்புடன் விளையாடிய மதுரை அணியின் தொடக்க வீரர் லோகேஷ்வர் 25 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இது அவரது மூன்றாவது டிஎன்பிஎல் அரை சதமாகும். மதுரை அணி 109 ரன்கள் எடுத்திருந்தபோது லோகேஷ்வர் 69 ரன்களில் ஆட்டம் இழந்தார். மதுரை பேந்தர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கௌஷிக் 57 ரன்கள் இருந்தபோது சன்னி சந்து வீசிய பந்து தனது விக்கெட்டினை பறிகொடுத்து திரும்பிச் சென்றார்.


பின்னர் வந்த மதுரை வீரர்கள் சேலம் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். ஆட்டத்தின் இறுதி ஓவரின் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், மதுரை பேந்தர்ஸ் அணியின் வீரர் முருகன் அஸ்வின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து மதுரை அணியை 19.3 ஓவர்களில் வெற்றி பெறச் செய்தார். சேலம் அணியின் பந்து வீச்சாளர்கள் சன்னி மற்றும் பொய்யாமொழி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.   


இதன் மூலம் டிஎன்பிஎல் 8வது சீசனின் மூன்றாவது போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி மதுரை பேந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. மூன்று விக்கெட் மற்றும் இறுதி ஓவரில் சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றி பெற செய்த முருகன் அஸ்வினுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.