ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.


மகத்தான வெற்றி


19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இன்று (ஜன.29) இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. இங்கிலாந்துக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே இங்கிலாந்து விக்கெட்டை பறிகொடுத்தது.


தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியினர் சரியான இடைவெளியில் விக்கெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றினர். 17ஆவது ஓவரில், 68 ரன்கள் எடுத்திருக்கையில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து ஆல் அவுட்டானது.


இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், சவுமியா திவாரி மற்றும் கொங்காடி திரிஷாவின் பொறுப்பான ஆட்டத்தால் இலக்கை எளிதில் எட்டியது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.


ரூ. 5 கோடி பரிசு!


இந்நிலையில் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டம் வென்ற ஜூனியர் மகளிர் அணிக்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.


"இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் உயரங்களை நோக்கி பயணிக்கிறது.  உலகக் கோப்பை வெற்றி மகளிர் கிரிக்கெட்டின் அந்தஸ்தை பல படிநிலைகளுக்கு உயர்த்தியுள்ளது. ஒட்டுமொத்த அணிக்கும் உதவி ஊழியர்களுக்கும் 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது நிச்சயமாக திருப்புமுனை ஆண்டாக அமைந்துள்ளது" என ட்வீட் செய்துள்ளார்.


 






மேலும் “அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எங்களுடன் இணைந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது டி20ஐ போட்டியைக் காண ஷஃபாலி வர்மா மற்றும் அவரது குழுவை அழைக்கிறேன். இந்த மாபெரும் சாதனை நிச்சயம் கொண்டாட்டத்திக்கு உரியது” என்றும் கூறியுள்ளார்.


 






19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை டி20 தொடர் முழுவதுமே, இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர். அது, இந்த போட்டியிலும் எதிரொலித்தது.


முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான முதல் டி-20 உலகக்கோப்பை தொடரில், 16 அணிகள் பங்கேற்றன. தென்னாப்ரிக்காவில் கடந்த 14 ஆம் தேதியில் இருந்து  நடைபெற்ற இந்தத் தொடர் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியது.


முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வென்று இங்கிலாந்தும், நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.


அரையிறுதி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை வெறும் 96 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுருட்டி இருந்தது. ஹன்னா பேக்கர் நான்கு ஓவர்களில் 3/10 என்ற அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதே நேரத்தில் கேப்டன் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் 3.4 ஓவரில் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். பேட்டிங்கிலும் அந்த அணியில் தொடக்க வீராங்கனைகள் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் இருந்தனர். 


ஆனால், இன்றைய போட்டியில், இங்கிலாந்து அணி பேட்ஸ்வுமன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தொடர் முழுவதும், இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்வேதா செஹ்ராவத்தின் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் விளையாடி வந்தார்.ட் அநாவசிய தவறுகள் எதையும் செய்யாமல், அதேபோல இந்திய வீராங்கனைகள் அணியாக இணைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முதல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கிளப்பி உள்ளது.