லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து கே.எல்.ராகுல் விடுவிக்கப்படுவது உறுதியாகியுள்ள சூழலில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது.


ஐபிஎல் 2025:


ஐபிஎல் சீசன் 17-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா மைதானத்தில் வைத்தே திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. பின்னர் கே.எல்.ராகுலை தனியாக சந்தித்து சமாதானப்படுத்தினார் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா. சஞ்சீவ் கோயங்காவின் செயல் காரணமாக கே.எல்.ராகுல் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால், ஐபிஎல் 18ஆவது சீசனில் அவர் வேறு அணிக்கு விளையாட முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.


இதனைத்தொடர்ந்து கே.எல்.ராகுல் பேட்டி ஒன்று அளித்தார். அதில், அணி உரிமையாளர்கள், பிசினஸ் பேக்ரௌண்டில் இருந்து வந்தவர்கள். அணிகள் இப்படிதான் விளையாட வேண்டும் என அவர்கள் நினைப்பார்கள். ஆனால், அவர்கள் நினைப்பதுபோல் நடக்க, இது பிசினஸ் கிடையாது. ஏற்ற, இறக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். எந்த ஒரு கிரிக்கெட் வீரராலும் தொடர்ந்து அதிரடி காட்ட முடியாது. அனைத்து வீரர்களுக்கும் ஏற்ற, இறக்கம் இருக்கும். ஒரு வருடம் சிறப்பாக விளையாடுவார், அடுத்த வருடம் மோசமாக ஆடுவார். ஒவ்வொரு போட்டியிலும் மாற்றம் இருக்கும்" என்று கூறி இருந்தார்.


விடுவிக்கப்படும் கே.எல்.ராகுல்?


இந்த நிலையில் தான் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் மெகா ஏலத்திற்கு முன்னதாக கே.எல்.ராகுலை கேப்டன் பொறுப்பில் இருந்த லக்னோ அணி விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைப்புகளை நிறைவு செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31 என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்.


இச்சூழலில் தான் கே.எல்.ராகுல் அணியில் இருந்து விடுவிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.. இது தொடர்பாக லக்னோ அணியின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ராகுல் கண்டிப்பாக மெகா ஏலத்தில் இடம் பெறுவார். லக்னோ அணி அவரை தக்க வைக்க விரும்பவில்லை.  ராகுல் ஏலப் பட்டியலில் நுழைந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை"என்று கூறியிருந்தார்.


அடுத்த கேப்டன் யார்?


இச்சூழலில் தான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தக்கவைக்கப்படும் வீரர்கள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், நிக்கோலஸ் பூரன், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், ஆயுஷ் பதோனி மற்றும் மோகிஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் இடம் பெறவில்லை. இதனால் அவர் அந்த அணியில் இருந்த விடுவிக்கப்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.