IPL Auction 2024: ஐபிஎல் ஏலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 21 வயதான ராபின் மின்ஸ் குஜராத் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.


ஐபிஎல் ஏலம்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம், நேற்று துபாயில் நடைபெற்றது. இதற்கான இறுதிப்பட்டியலில் 333 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டின. இறுதியில் மொத்தமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 72 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.


இதற்கான 10 அணிகள் சார்பில் மொத்தமாக 230.45 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதிகபட்சமாக கொல்கத்தா அணி 31.35 கோடி செலவிட்டது. இதில் பல வீரர்களுக்கான ஏலத்தொகை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதில், குறிப்பிட்ட நபர் என்றால் குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ராபின் மின்ஸ்.





ரூ.3.6 கோடிக்கு ஏலம்:


குஜராத் மாநிலம் பழங்குடியினத்தைச் சேர்ந்த 21 வயதான ராபின் மின்ஸை, குஜராத் டைட்டன்ஸ் அணி 3.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அடிப்படை ஏலத்தொகயான 20 லட்ச ரூபாய் பிரிவில் இருந்த அவரை கைப்பற்ற பல முன்னணி அணிகளும் தீவிரம் காட்டின.


சென்னை கூட 1.2 கோடி ரூபாய் வரை ஆர்வம் காட்டிய நிலையில், இறுதியில் குஜராத் அணி ராபினை ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேநேரம், கடந்த ஆண்டு இவர் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.


யார் இந்த ராபின் மின்ஸ்?


இடது கை பேட்ஸ்மேன் ஆன ராபின் மின்ஸ் பிரமாண்ட ஷாட்களை ஆடுவதில் கைதேர்ந்தவராக உள்ளார். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர், தோனியின் பரமரசிகராவார். தோனியின் வழிகாட்டியான சன்சல் பட்டாச்சார்யா தான் ராபினுக்கும் வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார். ஜார்க்கண்டில் உள்ள கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த மின்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியால் இங்கிலாந்தில் பயிற்சி அளிக்கப்பட்ட போது பலரது கவனத்தை ஈர்த்தார்.


தற்போதைய சூழலில் நம்கும் பகுதியியில் வசித்து வரும் ராபின், ஜார்கண்ட் மாநிலத்திற்காக இதுவரை ரஞ்சிடிராபி போட்டியில் விளையாடியது இல்லை. அதேநேரம், ஜார்கண்ட்டின் U19 மற்றும் U25 அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராபினின் தந்தை, தற்போது ராஞ்சி விமான நிலையத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். ராபினுக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர். 


கிரிக்கெட் வாழ்க்கை:


8 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வரும் ராபின், 10ம் வகுப்பு முடித்த பிறகு தனது கவனத்தை முழுமையாக கிரிக்கெட்டில் செலுத்த தொடங்கினர். அவரது தந்தையும் இதற்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் தந்துள்ளார். தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக அசத்தி வருகிறார். மிடில் ஆர்டரில் அசத்தி வரும் ராபின், அண்மயில் ஒடிஷாவில் நடைபெற்ற உள்ளூர் டி-20 போட்டியில், 35 பந்துகளில் 73 ரன்களை குவித்தார்.