ஐபிஎல் மினி ஏலம்:


இந்தியன் பிரீமியர் லீக்கின் 16-வது சீசனுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் 2023 மினி ஏலம் டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இதன் மூலம் அணி உரிமையாளர்கள் தங்கள் அணியின் பலவீனங்களை சரி செய்ய தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர். குறிப்பாக அதிரடியான ஆல்-ரவுண்டர்களை எடுக்கவே அனைத்து அணி நிர்வாகங்களும் போட்டி போட உள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களில் ஏலத்தில் பங்கேற்க, முன்பதிவு செய்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.


பதிவு செய்த வீரர்களின் பட்டியல்:


இந்திய கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க இதுவரை 991 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 10 அணி நிர்வாகங்கள் கலந்துகொள்ள உள்ள இந்த மினி ஏலத்தில் பங்கேற்க, 714 இந்தியர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள்  பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்த வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவே முதலிடத்தில் உள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவில் இருந்து  57 வீரர்கள், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த  52 வீரர்கள், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த  33 வீரர்கள் மற்றும்  இங்கிலாந்தை சேர்ந்த 31 வீரர்கள், ஐபிஎல் மினி ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதனிடையே, இந்திய அணிக்காக விளையாடியுள்ள 19 வீரர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.


சென்னை அணி விடுவித்த வீரர்கள்:


முன்னதாக, மினி ஏலத்தில் பங்கேற்பதற்காக அனைத்து அணி நிர்வாகங்களும், தங்கள் ஒப்பந்தத்திலிருந்து பல முன்னணி வீரர்களை விடுவித்தன. அதன்படி, சென்னை அணி டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு) ஆகியோரை விடுவித்தது. 


 


மும்பை அணி விடுவித்த வீரர்கள்:


மும்பை அணி, கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ் ஆகிய வீரர்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துகொண்டது.


ஐதராபாத், பெங்களூரு அணி விடுவித்த வீரர்கள்:


இதேபோன்று ஐதராபாத் அணி, கேன் வில்லியம்சன், நிகோலஸ் பூரன், ஜெகதீஷா சுஜித், பிரியம் கர்க், ரவிகுமார் சமர்த், ரொமாரியோ ஷெஃபெர்டு, சௌரப் துபே, சீன் அபாட், ஷஷான்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஷ்ரா, விஷ்ணு வினோத் ஆகியோரையும், பெங்களூரு அணி ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் , அனீஷ்வர் கௌதம், சாமா மிலிந்த், லவ்னித் சிசோடியா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு ஆகியோரையும் தங்களது ஒப்பந்தங்களில் இருந்து வெளியேற்றியுள்ளன. 


அணிகளின் கையிருப்புத் தொகை:


இதேபோன்று மற்ற அணி நிர்வாகங்களும் கடந்த சீசனில் சிறப்பாக செயல்படாத மற்றும் அணியின் ஸ்திரத்தன்மைக்கு ஒத்துவராத வீரர்களை வெளியேற்றி, மினி ஏலத்தில் பங்கேற்பதற்கான கையிருப்பு தொகையை உயர்த்தியுள்ளன. டெல்லி அணி ரூ.19.45 கோடி, பஞ்சாப் அணி ரூ.32.2 கோடி, ராஜஸ்தான் அணி ரூ.13.2 கோடி, குஜராத் அணி ரூ.19.25 கோடி மற்றும் லக்னோ அணி ரூ.23.35 கோடியை கையிருப்புத்தொகையாக வைத்துள்ளது.