இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் ஏற்படும் குறைபாடுகளில் இருந்து தப்பிக்கும் எண்ணம் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தென்னாப்பிரிக்க அணியுடனான தோல்விக்குப் பிறகு பேட்டியளித்துள்ளார். தொடர்ந்து அவர் வீரர்களின் மாறுபட்ட நிலை, கவனக் குறைபாடு, சரியான தருணங்களின் சரியாக செயல்படாமல் இருந்தது முதலானவற்றைத் தோல்விக்கான காரணங்களாக அடுக்கியுள்ளார். 


`பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும். அதில் இருந்து தப்பிக்க முடியாது. அவ்வபோது பேட்டிங்கில் குறைபாடு ஏற்படுகிறது; இது நல்லது அல்ல’ என தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்குப் பிறகான நிகழ்ச்சியின் போது விராட் கோலி கூறியுள்ளார். மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. 


`இதில் எதையும் காரணமாக சொல்ல முடியாது. இந்த தோல்வி வருத்தம் தருகிறது. ஒரு அணியாக நாங்கள் இவ்வளவு தூரம் வந்திருப்பதன் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரிகிறது. தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியுடன் போட்டியிடும் தொலைவுக்கு நாங்கள் வந்துள்ளோம். ஆனால் வெற்றி பெறவில்லை என்பது உண்மை; அதனை மனதில் எடுத்துக் கொண்டு, சற்றே தேர்ந்த கிரிக்கெட் வீரர்களாக மீண்டும் வருவோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான விளையாட்டால் தோல்வி அடைந்தது. 



தோல்வியில் இருந்து வெற்றிக்குத் திரும்பிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியைப் பாராட்டியுள்ளார் விராட் கோலி. 


`முதல் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினாலும், தென்னாப்பிரிக்க அணி திறமையாக விளையாடியது. அவர்கள் வென்ற மற்ற இரு போட்டிகளிலும், முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்பட்டனர் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள். கவனக் குறைபாடு எங்களின் முக்கிய தருணங்களை இழக்கச் செய்ததாலும், அவற்றைத் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இந்த வெற்றிக்குச் சொந்தக்காரர்கள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியினரே’ எனக் கூறியுள்ளார் விராட் கோலி. 


கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி படுதோல்வி அடைந்த போதும், விராட் கோலி இந்திய அணி சரியான தருணங்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 



தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டீன் எல்கர் தன்னுடைய அணியினர் முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும் விட்டுக் கொடுக்காமல் விளையாடியதாகத் தெரிவித்துள்ளார். `ஒன்று அல்லது இரண்டு நாள்களில் இந்த வெற்றி எங்களுக்குப் புரிய வரும். என் அணியின் மீது பெருமை கொள்கிறேன். எங்கள் வீரர்கள் திறமையாக விளையாடினார்கள். முதல் போட்டியின் தோல்விக்குப் பிறகு, நம்பிக்கை கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாய்ப்பைப் பெற்றுள்ளோம்’ என அவர் கூறியுள்ளார்.