நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதலில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி டி20 தொடரை இழந்தது. அதைத் தொடர்ந்து தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது. இந்த இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. 


இந்தப் போட்டிக்கு இந்திய கேப்டன் விராட் கோலி ஓய்வு முடிந்து மீண்டும் அணிக்கு திரும்புகிறார். இந்நிலையில் போட்டிக்கு முன்பாக இன்று இந்திய கேப்டன் விராட் கோலி காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மும்பை வான்கடே மைதானம் எப்போதும் இருப்பதைப்போல் சிறப்பாக உள்ளது. இந்த ஆடுகளத்தில் ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சு எடுபடும் என்று சொல்ல முடியாது. அனைத்து வகையான பந்துவீச்சாளர்களுக்கும் இது ஏற்ற ஆடுகளமாக அமைந்துள்ளது. நான் சிறிது நாட்கள் பயோபபுள் முறையில் இருந்து வெளியே சென்று ஓய்வு எடுத்து திரும்பியுள்ளேன். எப்போதும் பயோபபுளில் இருந்தால் அது வீரர்களுக்கு ஒரு மனசோர்வை ஏற்படுத்திவிடும். சாஹாவை பொருத்தவரை காயத்திலிருந்து அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளார். 






ஆகவே அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என்று நம்புகிறோம். கடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அணி சிறப்பாக முயற்சி செய்தது. இறுதியில் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்ல தீவிரமாக முயற்சி செய்வோம். மும்பை டெஸ்ட் போட்டியில் யார் அணியில் இடம்பெற மாட்டார்கள் என்பது நாளை தான் தெரியும். நாளை தான் இறுதி முடிவு எடுக்கப்படும்” எனக் கூறினார். 


டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அந்த ஓய்விற்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் மும்பை டெஸ்ட் போட்டியில் யாருக்கு பதிலாக களமிறங்குவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. புஜாரா மற்றும் ரஹானேவை இந்திய அணி நிர்வாகம் நீக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது மாயங்க் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு கோலி அணியில் இடம்பிடிப்பார் என்று தெரிகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதால் மாயங்க் அகர்வாலே நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் சுப்மன் கில் உடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 




கடந்த சில நாட்களாக மும்பையில் மழை பெய்து வருவதால் இந்தியா-நியூசிலாந்து அணியின் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்யவில்லை. தற்போது மழை ஒரளவு குறைந்துள்ளது. எனினும் வீரர்கள் உள்ளேயே பயிற்சி செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 16 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெரிய முடியுடன்.. தோனியும் அன்பு டென் சேப்பாகமும் சந்தித்த நாள்!