ஐபிஎல் முடிந்ததும் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த டி20 தொடர் முடிந்ததும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக முக்கியமான இந்திய வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்திய அணி வீரர்கள் அனைவரும் கொஞ்சமும் இடைவெளி இல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடர் முடிந்ததும், ஓரிரு வாரங்களில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. கிட்டத்தட்ட 2 மாதங்களாக நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முக்கிய இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படும் என்பதால் இந்த தொடரில் கேப்டன் மற்றும் வைஸ் கேப்டன்களுக்கு ஓய்வு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மட்டுமின்றி, ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வீரர்களுக்கும் ஓய்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.



அவர்களுக்கு பதிலாக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா அல்லது ஷிகர் தவான் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக நியமிக்க பட்டு இளம் வீரர்கள் கொண்ட அணி உருவாக்கப் படும் என்று தெரிகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வைத்த ஹர்திக் பாண்டியா மீது தேர்வுக்குழு நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


ஜூன் ஒன்பதாம் தேதி டெல்லியில் துவங்கும் இந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரின் மீதமுள்ள போட்டிகள், கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட், பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வரும் 22 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்க தொடரில் மட்டுமின்றி, அயர்லாந்து அணியுடன் ஆன இரண்டு போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளுக்கும் இதே அணி செல்லும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றன. 


ஏற்கனவே விராட் கோலி கொடூரமான ஃபார்ம் அவுட்டில் இருப்பதால், அவருக்கு கண்டிப்பாக ஒரு பிரேக் தேவை என்று தேர்வர்கள் கருதுகின்றனர்.



இதுகுறித்து பெரிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசியபோது, "இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக குறைந்தது மூன்றரை வாரம் ஓய்வு வேண்டும். எனவே கோலி, ரோகித், கேஎல், ரிஷப், பும்ரா ஆகியோர் நேரடியாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்வார்கள். அணியின் முக்கிய வீரர்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். வேலைப்பளு காரணமாக மூத்த வீரர்கள் யாரும் அடுத்த 7 டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள். கடந்த வருடம் இலங்கை தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்திய ஷிகர் தவானுக்கு கேப்டன்சி கொடுக்கப்படலாம். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திவரும் ஹர்திக் பாண்டியாவையும் தேர்வுக்குழு கணக்கில் எடுத்துக் கொள்ளும்", என்று கூறினார்.