ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள மோடேராவில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகப் கோப்பைக்காக இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 1.25 லட்சம் பார்வையாளர்கள் மைதானத்தினை நிரப்பவுள்ளனர். போட்டியில் கலந்துகொள்பவர்களில் நீங்களோ அல்லது உங்கள் நட்பு வட்டத்தில் யாரேனும் இருந்தால், தொந்தரவில்லாமல் மற்றும் சுவாரஸ்யமாக போட்டியைக் காண நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் குறித்து இங்கு காணலாம்.


1. பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும் : 


ஏர்போட்கள், இயர்போன்கள், பவர் பேங்க்கள் மற்றும் கேபிள்கள் உட்பட எதையும் கொண்டு வர வேண்டாம். லிப்ஸ்டிக்ஸ், லிப் பாம்கள் மற்றும் சன்ஸ்கிரீன்கள் போன்ற சிறிய பொருட்களும் நுழைவு வாயிலிலேயே பறிமுதல் செய்யப்படும். உங்களுடன் மொபைல் ஃபோன் மற்றும் கொடிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். நிழல்களுக்காக அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டாம். நிழல்களுக்காக தலையில் தொப்பிகளை அணிந்து செல்லலாம். 


மொபைல் போன் அல்லது கொடிகளைத் தவிர வேறு எதுவும் மைதான வளாகத்திற்குள் தடைசெய்யப்பட்டுள்ளது, கடந்த காலங்களில் சில நிகழ்வுகளில், பார்வையாளர்கள் தண்ணீர் பாட்டில்கள் போன்ற பொருட்களை வீரர்கள் மீது வீசிய காரணத்தினால் பார்வையாளர்கள் தங்களுடன் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. 


2. மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்:


ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படாத மதிப்புமிக்க பொருட்கள் இருந்தால், அப்பகுதியில் உள்ள உள்ளூர் வீடுகளில் கட்டணமாக ரூபாய் 500 செலுத்தி அவற்றை பாதுக்காப்பா வைத்துச் செல்லலாம். அல்லது உங்கள் உடமைகளை உங்கள் கார் அல்லது ஹோட்டலில் விட்டுவிடுங்கள். 


3. காசு முக்கியம் பிகிலு:


போதுமான பணத்தை எடுத்துச் செல்லுங்கள், ஏனெனில் அரங்கத்திற்குள் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை உயர்ந்ததாக இருக்கும், மேலும் அனைத்து விற்பனையாளரும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஏற்பார்கள் என உறுதியாகக் கூறமுடியாது. மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள் ரூ.100 முதல் 200 வரை விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.


4. உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யுங்கள்:


போட்டியின் போது முக்கியமான தருணங்களைத் தவறவிடாமல் இருக்க முன்கூட்டியே உணவை ஆர்டர் செய்யுங்கள் அல்லது ஸ்டேடியத்தில் விற்கப்படும் சில தின்பண்டங்களை கூட்ட நெரிசலில் வாங்கவேண்டி இருக்கும்.


5. நினைவுப் பொருட்களை வாங்குவதில் எச்சரிக்கையாக இருங்கள்: 


போட்டிக்கு முன் நினைவுச் சின்னங்களை விற்கும் தெருவோர வியாபாரிகளிடமிருந்து பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை வாசலில் பறிமுதல் செய்யப்படலாம். உங்களுக்கு நினைவுப் பொருட்கள் வேண்டுமானால், போட்டி முடிந்ததும் அவற்றை வாங்க முயற்சிக்கவும்.


6.  அதிகமாக தண்ணீர் குடியுங்கள்: 


இந்திய கிரிக்கெட் வாரியம் மைதான வளாகத்தில் உள்ள பல கவுன்டர்களில் தண்ணீருக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது, ஆனால் நூற்றுக்கணக்கான மக்கள் தண்ணீரைப் பெற முயற்சிப்பார்கள் என்பதால், வரிசையில் நிற்கும்போது கவனமாக இருக்கவும். உட்காரும் பகுதிக்கு வந்து விற்பனையாளர்கள் தண்ணீரை விற்கக்கூடாது என்பதால், அந்த கடைகளில் இருந்து உங்களுக்காக தண்ணீரை நீங்களே வாங்கிச் செல்லுங்கள்.


7. பார்க்கிங்: 


மைதானத்திற்காகவே மொத்தம் 15  பார்க்கிங் இடங்கள் உள்ளது.  ஆனால் ஸ்லாட்டுகளை நியமிக்கப்பட்ட பார்க்கிங் ஆப் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். வாகனங்கள் நிறுத்தும் விதிமுறைகளை கடைபிடிக்காத நபர்களுக்கு மைதான பராமரிப்பு அதிகாரிகள் கடும் அபராதம் விதிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


8. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் :


1.25 லட்சம் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், உடனடியாக ஸ்டேடியத்தை அடையவும், பார்க்கிங் சிரமத்தைத் தவிர்க்கவும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது நல்லது. ரசிகர்களின் வசதிக்காக, AMTS மற்றும் BRTS போட்டி நாளில் கூடுதல் பேருந்துகளை அறிவித்துள்ளன, மேலும் அகமதாபாத் மெட்ரோவும் போட்டியின் நேரத்தைக் கருத்தில் கொண்டு கூடுதல் நேரங்களுக்கு இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. 


9. முன்கூட்டியே வருவது நல்லது : 


லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் போட்டியின் தன்மையை கருத்தில் கொண்டு, முன்கூட்டியே வந்துவிடுவது மிகவும் நல்லது. முன்கூட்டியே வருகையை உறுதிசெய்வதன் மூலம், போக்குவரத்து நெரிசல்கள், சிக்கல்கள் இல்லாமல் பாதுகாப்பான வாகன நிறுத்தம் மற்றும் இருக்கையை அடைவது என அனைத்தும் சிரமம் இல்லாமல் இருக்கலாம்.