இந்திய கிரிக்கெட் அணி வரும் 18ஆம் தேதி முதல் ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதி பெற்றிருந்தார். இதன்காரணமாக ஜிம்பாவே தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ஷிகர் தவான் துணை கேப்டனாக மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்தத் தொடரில் பங்கேற்க இந்திய அணியின் வீரர்கள் ஜிம்பாவே சென்றடைந்தனர். 


இந்நிலையில் இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றன. இந்திய சுந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு செய்தது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஜிம்பாவின் ஹராரே பகுதியிலுள்ள தூரகத்தில் சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியின் வீரர்கள் பயிற்சியாளர் விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆகியோருடன் இந்தக் கொண்டாடத்தில் பங்கேற்க உள்ளனர். 






முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாவே சென்று நேற்று முதல் முறையாக பயிற்சியை தொடங்கினர். அந்தப் பயிற்சியில் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பங்கேற்கவில்லை. அவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை ஜிம்பாவே சென்றடைந்தனர். இதனால் அவர்கள் அடுத்த பயிற்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 


ஜிம்பாவே தொடருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மண் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியுடன் பயணம் செல்ல உள்ளார். இதன்காரணமாக ஜிம்பாவே தொடருக்கான இந்திய அணிக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளராக உள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற டி20 தொடருக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண் பயிற்சியாளராக பணியாற்றினார். 


இந்தச் சூழலில் தற்போது மீண்டும் பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய தீபக் சாஹர் தற்போது இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். 


இந்திய அணியின் விவரம்:


கே.எல்.ராகுல்(கேப்டன்),ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்


இந்தியா-ஜிம்பாவே தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி தொடங்குகிறது. 18ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி 20ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 22ஆம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள்  போட்டி நடைபெற உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை சமீபத்தில் வென்றது. இதைத் தொடர்ந்து அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் கே.எல்.ராகுலுக்கு ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக ஜிம்பாவே தொடர் நல்ல பயிற்சியாக அமையும் என்று கருதியுள்ளதால் அவர் அணியின் கேப்டனாக இந்தத் தொடரில் விளையாட உள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண