மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்ற,  இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.


மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம்:


மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி,  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.


அதில், முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியுற்றது. இதனால், தொடரில் 2-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை பெற்றது. பின்பு, மூன்றவாது போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால், தொடரை வெல்லும் வாய்ப்பில் இந்திய அணி இன்னும் நீடிக்கிறது.


4வது டி-20 போட்டி:


இந்நிலையில் தான் நான்காவது டி-20 போட்டி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவில் உள்ள புளோரிடா மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற மேற்கிந்திய தீவுகள் அணியும், இன்றைய போட்டியில் வென்று தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க இளம் இந்திய அணியும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால், 2016ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக அந்த அணி வெல்லும் முதல் கிரிக்கெட் தொடராக இது இருக்கும்.


அமெரிக்காவில் போட்டி:


முன்னதாக 1844ம் ஆண்டு கனடா அணிக்கு எதிராகவும், 1859ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் அமெரிக்கா அணி உள்ளூரில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது.  புளோரிடாவில் உள்ள இந்த மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 முறை மோதியுள்ளன. அதில் ஒரு போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானம் தான் அமெரிக்காவில் கிரிக்கெட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒரே மைதானம். இதில் இதுவரை 14 டி20 மற்றும் 6 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 20 போட்டிகள் நடைபெற்றுள்ளன.


இந்திய அணியின் பிரச்னை:


இந்த தொடரில் இந்திய அணியின் முக்கிய பிரச்னையாக இருப்பது பேட்டிங் தான். டாப் ஆர்டரில் களிமிறங்கும்  சுப்மன் கில் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை. கடந்த போட்டியின் மூலம் டி-20 போட்டிகளில் அறிமுகமான் ஜெய்ஷ்வாலும் ஜொலிக்கவில்லை.


மிடில் ஆர்டரில் களமிறங்கும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரும் சொதப்பி வருகின்றனர். இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற மேற்குறிப்பிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அதேநேரம், இந்த தொடரின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான, திலக் வர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்து வருகிறார். முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும் கடைசி போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட சூர்யகுமார் யாதவ், நம்பிக்கை அளித்துள்ளார்.