இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 352 ரன்கள் பின் தங்கியுள்ளது.


கோலி அபாரம்:


போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் போட்டியில் இரண்டாவது நாள் தொடங்கியதும், கோலி - ஜடேஜா ஜோடி தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக நிலைத்து நின்று ஆடிய கோடிய டெஸ்ட் போட்டிகளில் தனது 29வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம், தனது சர்வதேச அளவிலான 500வது போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அதோடு, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் விளாசியுள்ளார்.


438 ரன்கள் குவிப்பு:


மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய ஜடேஜா 61 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த இஷான் கிஷன் 25 ரன்களிலும், அஷ்வின் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் நடையை கட்டினர். இதனால் இந்திய அணி 438 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக கோலி 121 ரன்களை குவித்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கெமார் ரோச் மற்றும் வார்ரிகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 


மேற்கிந்திய தீவுகள் அணி நிதான ஆட்டம்:


இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களான பிராத்வெயிட் மற்றும் சந்தர்பால் ஜுனியர் நிதானமாக ஆடி முதல் விக்கெட்டிற்கு 71 ரன்களை சேர்த்தனர். தொடர்ந்து சந்தர்பால் 33 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, முதல்நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டை இழந்து 86 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியை காட்டிலும் 352 ரன்கள் பின் தங்கியுள்ளது.


போட்டியின் முதல் நாள் சுருக்கம்:


டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள்:


மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் வென்று 1-0 என இந்திய அணி முன்னிலை வகித்து வரும் நிலையில்போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கம் அளித்தனர். ரோகித் சர்மா  அரைசதம் கடக்க, சக வீரரான ஜெய்ஷ்வாலும் அரைசதம் விளாசினார். இந்த கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 139 ரன்களை குவித்து இருந்தபோது, 57 ரன்கள் சேர்த்து இருந்த ஜெய்ஷ்வால் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த சுப்மன் கில் வெறும் 10 ரன்களில் நடையை கட்டினார். பொறுப்புடன் விளையாடி வந்த ரோகித் சர்மா சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 80 ரன்கள் குவித்து இருந்தபோது அவர் வாரிகன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


கோலி அபாரம்:


அவரை தொடர்ந்து ராகானேவும் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 182 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது. இதையடுத்து, 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கோலி மற்றும் ஜடேஜா பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். கோலி அரைசதம் கடந்து அசத்தினார். இதனால், இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை சேர்த்தது.