ஆசிய கோப்பை 2024:


9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்றன. இதில் இறுதிப்போட்டி இன்று (ஜூலை 28) நடைபெற்றது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இதில் மோதின. 


டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். இதில் ஷெபாலி வர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமா சேத்ரி 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 11 ரன்களில் கேட்ச் ஆனார்.


மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்மிரிதி மந்தனா, 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஜெமீமா ரோட்ரிக்வெஸ் 29 ரன்களில் ரன் அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தத. இலங்கை அணி 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. 


இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷ்மி மற்றும் சாமரி அதபத்து ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் விஷ்மி 1 ரன்னில் நடையைக்கட்டினார்.இதனைத்தொடர்ந்து ஹர்ஷித சமரவிக்ரமா களம் இறங்கினார். சாமரி அதபத்து  மற்றும் ஹர்ஷித சமரவிக்ரமா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களது ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். இதனிடைய அதிரடியாக விளையாடி வந்த சாமரி அதபத்து விக்கெட்டானார்.


சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை:


மொத்தம் 43 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 61 ரன்களை குவித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ஹர்ஷிதாவுடன் ஜோடி சேர்ந்தார் கவிஷா தில்ஹாரி.






இவர்களது ஜோடி இலங்கை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. கடைசி வரை களத்தில் நின்ற ஹர்ஷித சமரவிக்ரமா 69 ரன்களும், கவிஷா தில்ஹாரி 30 ரன்களும் எடுத்தனர். இவ்வாறாக இலங்கை அணி 18.4 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் பெண்கள் ஆசிய கோப்பையை முதல் முறையாக வென்றது இலங்கை அணி.