இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, இரு அணிகளும் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ( நாளை மறுநாள்) தொடங்க உள்ளது.


கோலியை வெறுப்பேற்றிய ரசிகர்:


ஒருநாள் போட்டித் தொடரில் ரோகித்சர்மா, விராட் கோலி ஆகியோர் பங்கேற்கின்றனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க விராட் கோலி ஓரிரு தினங்களுக்கு முன்பு இலங்கை சென்றார்


இந்த நிலையில், விராட் கோலி பயிற்சியில் ஈடுபடுவதற்காக மைதானத்தில் உள்ள அறை ஒன்றில் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென ரசிகர் ஒருவர் அவருக்கு மிக அருகில் இருந்து சோக்லி சோக்லி என்று கத்தினார். இதனால், ஆவேசம் அடைந்த விராட் கோலி சட்டென்று திரும்பி பார்த்தார். இந்த சம்பவத்தை அந்த நபர் வீடியோவாகவும் எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






ரசிகர்கள் அதிர்ச்சி:


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு உலகெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இந்த சூழலில், ரசிகர் ஒருவர் கோலியை வெறுப்பேற்றும் விதத்தில் இவ்வாறு நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச டி20-யில் இருந்து ஓய்வு பெறுவதாக கோலி அறிவித்த நிலையில், அவர் பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இனி வரும் காலங்களில் ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஆட உள்ளனர்.


விராட்கோலி இலங்கை மண்ணில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி இலங்கை அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 594 ரன்களை எடுத்துள்ளார். அதில் 10 சதங்களும், 12 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 166 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.