தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் பின்னர் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.


இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். மேலும், டி 20 போட்டியை சூர்யகுமாரும், ஒரு நாள் போட்டியை கே.எல்.ராகுலும் வழிநடத்துவார்கள்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிங்கு சிங் மற்றும் தமிழக வீரரான சாய் சுதர்சன் ஒரு நாள் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இது அவர்கள் விளையாட உள்ள முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி.


அதேபோல், ஒரு நாள் போட்டிகளில் சொதப்பிய சூர்யகுமார் யாதவிற்கு இந்த முறை ஒரு நாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே சஞ்சு சாம்சன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்த முறை பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது.


முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்காக டி 20 போட்டியில் சாஹல் விளையாடி இருந்தார். ஆனால், ஆசிய கோப்பை மற்றும் 2022 உலகக் கோப்பை தொடரில் ஓரங்கட்டப்பட்டார். அதேபோல் , ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் இவரை பிசிசிஐ அணியில் எடுக்கவில்லை. இத நேரம் விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பைகளில் சிறப்பாக அவர் விளையாடி இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.


டி 20 அணியில் ஏன் தேர்வு செய்யவில்லை:


இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் அணியில் தேர்வாகியுள்ள சுழற்பந்து வீச்சாளர் சாஹல் டி20 அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், “டி20 அணியில் சாஹல் இல்லை. குறிப்பாக ஒருநாள் அணியில் அவரை தேர்வு செய்துள்ள நீங்கள் டி20 அணியில் தேர்ந்தெடுக்கவில்லை. தேர்வுக்குழு சாஹலுக்கு வாயில் லாலிபாப் கொடுத்துள்ளார்கள்.


பெயருக்காக தேர்ந்தெடுத்துள்ளார்கள்:


அதாவது நீங்கள் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட்டில் உங்களை நாங்கள் தேர்வு செய்ய மாட்டோம். பெயருக்காக மற்றொரு தொடரில் தேர்ந்தெடுப்போம் என்பது போல் அவர்களின் முடிவு இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.


அதே போல பேட்ஸ்மேன்களுக்கு சவாலான தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் புஜாரா, ரகானே போன்றவர்களும் தேர்வு செய்யப்படவில்லை. இளம் வீரர்களுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுப்பது நல்லது. ஆனால் ரகானே, புஜாரா அல்லது உமேஷ் யாதவ் ஆகியோரிடம் தேர்வு குழுவினர் பேசியிருக்க வேண்டும். ஏனெனில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் உமேஷ் யாதவ் சிறப்பாக விளையாடினார்.


இருப்பினும் தற்போது கழற்றி விடப்பட்டுள்ள இந்த 3 பேரும் மீண்டும் கம்பேக் கொடுப்பது மிகவும் கடினமாகும். ஆனால் இந்தியாவுக்காக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள அவர்களிடம் பிசிசிஐ பேச வேண்டும். குறிப்பாக ஏன் தேர்வு செய்யப்படவில்லை வருங்காலங்களில் வாய்ப்பு இருக்கிறதா என்பதை பற்றி அவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறினார்.