இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் சில போட்டிகளின் வெற்றியை காலத்திற்கும் மறக்கவே முடியாது. உலக கிரிக்கெட் அரங்கில் தவிர்க்கவே முடியாத ஒரு பேட்ஸ்மேனாக உலா வருபவர் விராட் கோலி. விராட்டின் ரசிகர்களால் காலத்திற்கும் கொண்டாடப்படும் இன்னிங்ஸ் ஒன்றை கோலி ஆடிய போட்டி அதுவாகும்.



டி20 உலகக்கோப்பை:


2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் மெல்போர்ன் மைதானத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதியது. இந்த போட்டியில பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 4 ரன்களுக்கும், பாபர் அசாம் டக் அவுட்டும் ஆகி வெளியேறிய நிலையில், ஷான் மசூத் – இப்திகார் ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்டது.


இருவரது அபாரமான ஆட்டத்தால் பாகிஸ்தானின் ஸ்கோர் மீண்டும் எகிறத் தொடங்கியது. சிக்ஸர்களை பறக்கவிட்டுக் கொண்டிருந்த இப்திகார் இந்தியாவின் ஷமியின் வேகத்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். அவர் 34 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்து அவுட்டாக, கடைசி வரை அவுட்டாகாமல் மசூத் 42 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்தார். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்:


இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கே.எல்.ராகுல் – ரோகித் சர்மா ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் தலா 4 ரன்களில் அவுட்டாக 10 ரன்களுக்குள் இந்திய அணி 2 விக்கெட்டை இழந்தது. முதல் விக்கெட் விழுந்த பிறகு களத்திற்குள் விராட் கோலி களமிறங்க, மறுமுனையில் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்வும் 15 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த அக்‌ஷர் படேல் 2 ரன்களில் ஏமாற்றம் தர 31 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.


கடைசி நம்பிக்கையான கோலி:


இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக கோலி மட்டும் இருக்க மறுமுனையில் அவருக்கு ஹர்திக் பாண்ட்யா ஒத்துழைப்பு தந்தார். இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த நிலையில், ஹாரிஷ் ராஃப், நசீம்ஷா, ஷாகின் அப்ரிடி வேகத் தாக்குதலை தொடுத்துக் கொண்டிருந்தனர்.


ஹர்திக் பாண்ட்யாவை மறுமுனையில் வைத்துக் கொண்டு களத்தில் நங்கூரமிட்ட விராட் கோலி ஓரிரு ரன்களாக எடுத்து பவுண்டரிகளாக விளாசி தேவையான பந்துகளை சிக்ஸருக்கு விளாசி இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தார்.


18 பந்துகளில் 48 ரன்கள்:


18  பந்துகளில் 48 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான சூழலிலே இந்தியா இருந்தது. மெல்போர்னில் குழுமியிருந்த இந்திய ரசிகர்கள் இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தனர். ஷாகின் ஷா வீசிய 17வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசி, அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள் உள்பட 17 ரன்களை எடுத்தது.


ஹர்திக் பாண்ட்யாவும் ஏதுவான பவுண்டரிகளை விளாச கடைசி 8 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. அதுவரை பாகிஸ்தானின் ரசிகர்கள் தங்களுக்கே வெற்றி என்று கருதியிருந்தனர்.


அதியற்புதமான சிக்ஸர்:


ஹாரிஷ் ராஃப் வீசிய 19வது ஓவரின் 5வது பந்தை விராட் கோலி ஹாரிஷ் ராஃப் தலைக்கு மேலே நேராக ஒரு சிக்ஸர் அடிப்பார். அந்த சிக்ஸர் உலக கிரிக்கெட் வரலாற்றில் எப்போதுமே கொண்டாடப்படும் சிக்ஸர் ஆகும். ஏனென்றால் அந்த பந்து அவ்வளவு நேர்த்தியான பந்து ஆகும். இந்த போட்டியை கண்ட முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இப்படி ஒரு ஷாட்டை விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு பிறகு விராட் கோலியால் மட்டுமே அடிக்க முடியும் என்று புகழாரம் சூட்டியிருப்பார். ஏனென்றால் அப்படி ஒரு சிக்ஸர் என்பது அசாத்தியமானது.


ஹாரிஷ் ராஃப் வீசிய அடுத்த பந்தையும் கோலி ஒரு சிக்ஸருக்கு பறக்கவிட 6 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில் பாண்ட்யா 40 ரன்களில் அவுட்டானார். 37 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் கோலி 2 ரன்கள் எடுக்க, 3 பந்துகளில் 13 ரன்கள் என்ற நிலை வந்தது. நவாஸ் வீசிய அந்த ஓவரின் 4வது பந்தை கோலி சிக்ஸருக்கு பறக்கவிட, அந்த பந்தில் நோ –பாலாக அமைந்தது இந்தியாவிற்கு சாதகமாக அமைந்தது.


காலத்திற்கும் மறக்கவே முடியாத வெற்றி:


ப்ரீ- ஹிட்டில் கிடைத்த அந்த பந்தால் இந்தியா வெற்றிக்கு 3 பந்துகளில் 5 ரன்கள் என்ற நிலை வந்தது. அந்த பந்தில் கோலி போல்டானாலும் இந்தியாவிற்கு 3 ரன்கள் கிடைத்தது. இதனால், 2 பந்துகளில் 2 ரன்கள் என்ற நிலை வந்தது. தினேஷ் கார்த்திக் அந்த பந்தில் அவுட்டாக அந்த பந்து ஒயிட் என்பதால் 1 பந்தில் 2 ரன் என்ற நிலை வந்தது. அந்த முக்கியமான கடைசி பந்தை நவாஸ் ஒயிடாக வீச 1 பந்திற்கு 1 ரன் என்ற நிலை வந்தது. அஸ்வின் அந்த பந்தை அபாரமாக ஆடி 1 ரன் எடுக்க இந்தியா அபார வெற்றி பெற்றது.


ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆர்ப்பரிக்க இந்திய வீரர்கள் மைதானத்தின் உள்ளே ஓடி வந்து விராட் கோலியை கொண்டாடினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்தார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா மைதானத்தின் உள்ளே ஓடி வந்து விராட் கோலியை தூக்கி மகிழ்ச்சியில் திளைத்தார்.


வரலாற்றில் இன்று:


இந்தியாவின் வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்ற சூழலில், 31 ரன்னுக்கு 4 விக்கெட் என்ற நெருக்கடியான சூழலில் இந்தியாவை தனி ஆளாக போராடி காப்பாற்றிய விராட் கோலியின் அந்த இன்னிங்சை எப்போது பார்த்தாலும் தனி பரவசம் ஆகும். அப்படி ஒரு அதியற்புதமான இன்னிங்சை விராட் கோலி ஆடியது இதே நாளில் ஆகும்.