INDvsNZ 3RD ODI: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டு இருந்தது.


இந்நிலையில், மழை இடைவிடாமல் பெய்ததால் ஆட்டம் ரத்தானது. இதையடுத்து ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது. 


இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. பயணத்தின் இறுதி ஒருநாள் போட்டி இன்று ஹாக்லி ஓவலில் உள்ள கிறிஸ்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால்  1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகித்து வந்தது.


இந்தியா திணறல்:


மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே திணறி வந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய சுப்மன் கில் தனது முதல் ரன்னை அடிக்கவே 10 பந்துகளுக்கு மேல் வீணடித்துவிட்டார். முதல் விக்கெட் அணியின் ஸ்கோர் 39 ரன்களாக இருந்தபோது வீழ்ந்தது. அதன் பின்னர், 55 ரன்கள் இருக்கும் போது 2வது விக்கெட் வீழ்ந்தது. இந்திய அணி சார்பில் யாராவது நிலைத்து நின்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் வாஷிங்டன் சுந்தரைத் தவிர யாரும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. 


ஸ்ரேயஸ் ஐயர் 59 பந்தில் 8 ஃபோர் உட்பட 49 ரன்னில் தனது அரைசதத்தினை நழுவவிட்டு ஆட்டமிழந்தார். அதேபோல் வாஷிங்டன் சுந்தர் 64 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.  இதில் அவர் 5ஃபோர், ஒரு சிக்ஸர் விளாசியிருந்தார். 47.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நியூசிலாந்து அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. மிகவும் கட்டுக்கோப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் சார்பில், ஆடம் மிலைன், மிட்ஷெல் தலா 3 விக்கெட்டுகளும்,  டிம் சவுதி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 


2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் பலவீனம் இதுதான்? - சரமாரியாக விமர்சித்த முன்னாள் வீரர்!


குறுக்கிட்ட மழை:


இந்தியா நியூசிலாந்து அணிகளுக்குன் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இலக்கை நோக்கி மிகவும் நிதானமாக ஆடி வந்த நியூசிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட ஆட்டம் தடைபட்டது.


மழை இடைவிடாமல் பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்தானது. இதையடுத்து நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. முன்னதாக டி20 தொடரை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.


டி20 தொடரை வென்றது இந்தியா


நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டம் நவம்பர் 18-ஆம் தேதி வெல்லிங்டனில் நடந்தது.
இங்கு இடைவிடாத மழை கொட்டியதால் டாஸ் கூட போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.


இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி இரண்டாவது டி20 ஆட்டம் நடந்தது. அந்த ஆட்டத்தில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.


மூன்றாவது ஆட்டம் 22-ஆம் தேதி நேபியரில் நடந்தது. அந்த ஆட்டத்திலும் மழை பெய்தது. இதனால், ஆட்டம் டிஎல்எஸ் முறைப்படி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அணியும், ஒரு நாள் தொடரை தவன் தலைமையிலான இந்திய அணியும் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.