இந்தியா –நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கைத் தொடங்கினார். இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்திருந்தது.


இந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜடேஜா மேற்கொண்டு ரன்கள் ஏதும் சேர்க்காமல் 50 ரன்களிலே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் விரித்திமான் சஹா 1 ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதலாவது சதத்தை அடித்தார்.






அறிமுகப்போட்டியிலே சதம் அடித்து அசத்திய கங்குலி, ரோகித்சர்மா ஆகியோரின் சாதனைப்பட்டியலில் ஸ்ரேயாஸ் அய்யரும் இணைந்தார். ஆனால், அவர் சதமடித்த சிறிது நேரத்தில் 105 ரன்களில் ஸ்ரேயாஸ் அய்யர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணி 305 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்த பிறகு, ஆல்ரவுண்டர் அஸ்வின் பொறுப்புடன் ஆடினர். அவ்வப்போது ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டினார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 339 ரன்களை எடுத்திருந்தது.


தொடர்ந்து ஆடிய இந்திய அணி விரைவிலே ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிவந்த அஸ்வின் 56 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 38 ரன்களை எடுத்து அஜாஸ் படேல் பந்தில் போல்டாகினார். அவர் அவுட்டான பிறகு உமேஷ் யாதவ் ஒரு சிக்ஸர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்திய அணி இறுதியில் 111.1 ஓவர்களில் 345 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.


நியூசிலாந்து தரப்பில் டிம்சவுதி 27.4 ஓவர்களில் 69 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கைல் ஜேமிசன் 23.2 ஓவர்களில் 91 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஜாஸ் படேல் 29.1 ஓவர்களில் 90 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில், டிம் சவுதி புஜாரா, ஸ்ரேயாஸ், ஜடேஜா ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்சை டாம் லாதமும், வில் யங்கும் தொடங்கினார். நிதானமான ஆட்டத்தை தொடங்கிய அவர்கள், இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். லாதம் 50* ரன்களும், யங் 75* ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். மைனாத்தில் போதுமான வெளிச்சம் இல்லாத்தால், கடைசி மூன்று ஓவர்கள் வீசப்படாமல் போட்டி முடித்து கொள்ளப்பட்டது. 






இந்திய அணி பவுலர்களைப் பொருத்தவரை, விக்கெட்டை எடுக்க வேண்டும் என போராடினர். ஆனால், இந்திய அணி விக்கெட் அப்பீல் செய்து விக்கெட்டை வாங்கிய மூன்று முறையும், லாதம் ரிவ்யூ கேட்டு திரும்ப பெற்றார். கடைசி வரை விக்கெட் எடுக்க முடியாத ஏமற்றத்தில் இன்றைய நாள் ஆட்டத்தை இந்திய அணி முடித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண