இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ளன. இந்தத் தொடரின் கடைசி டி20 போட்டி இன்று ஹைதரபாத்தில் நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இந்தப் போட்டியில் அதிக விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


 


இந்நிலையில் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் முகமது கைஃப் ஒரு அறிவுரையை அளித்துள்ளார். அதில், “கிரிக்கெட் விளையாட்டில் ஃபீல்டிங் மிகவும் முக்கியமான ஒன்று. மோசமான ஃபீல்டிங் காரணமாக முதல் டி20 போட்டியில் நாம் தோல்வி அடைந்தோம். ஆகவே அதை நாம் நிச்சயம் கவனமாக எடுத்து கொள்ள வேண்டும். தற்போது உள்ள வீரர்கள் ஜிம்மில் அதிகமாக உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக உள்ளார்கள். 


 


ஆனால் ஜிம்மில் அதிக நேரம் செலவிட்டால் ஃபீல்டிங் வராது. நீங்கள் நிச்சயம் களத்தில் இறங்கி பயிற்சி செய்தால் மட்டுமே ஃபில்டிங் சிறப்பாக செய்ய முடியும். என்னை பொறுத்தவரை சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்னர் அந்த அணியில் இருக்கும் வீரர்கள் சுதந்திரமாக எந்தவித பயமும் இல்லாமல் விளையாடும் சூழலை உருவாக்க வேண்டும். தற்போது இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார். ஆகவே அணி தொடர்பான சந்தேகம் இனி இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 


 


கிரிக்கெட் உலகில் மிகவும் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவர் முகமது கைஃப். இவர் இந்திய அணிக்காக 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். குறிப்பாக கைஃப்-யுவராஜ் கூட்டணி இந்திய அணி சிறப்பான ஃபீல்டர்களாக இருந்தனர். ஃபில்டிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கைஃப் அசத்தினார். 


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவர் இத்தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியில் மாற்று வீரராக உமேஷ் யாதவ் களமிறங்க உள்ளார். 


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின்பு இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. 


ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் , ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.


இந்தியா- தென்னாப்பிரிக்கா தொடர்:


செப்டம்பர் 28- முதல் டி20 போட்டி


அக்டோபர் 2- இரண்டாவது டி20 போட்டி


அக்டோபர் 4- மூன்றாவது டி20 போட்டி


அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி


அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி


அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி


தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.