இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா 17 ரன்களிலும், சுப்மன் கில் 18 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 


இருவரும் பந்துகளை வீணடிக்கமல் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியும், சிங்கிள்கள் சேகரித்தவண்ணம் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.  இரண்டாம் நாள் ஆட்ட முடிவின் படி இந்திய அணி ஆஸ்திரேலிய அணியைவிட 444 ரன்கள் பின் தங்கியுள்ளது. 


இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச், 9) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது சொந்த காரணங்களுக்காக தாய்நாடு திரும்பியுள்ளதால், கடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மிகவும் நிதானமாகவும்  சிறப்பாகவும் விளையாடி ரன்கள் சேர்த்தது. அதிலும், தொடக்க ஆட்டக்காரர் கவாஜா இந்த ஒட்டுமொத்த தொடருக்கும் சேர்த்து சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்தார். இந்திய அணி பந்து வீச்சாளர்கள் என்ன செய்வது என  தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அளவிற்கு அவர்கள் கவாஜா இந்திய பவுலர்களை தண்டித்தார்.  இந்திய அணி சார்பில் 6 பந்து வீச்சாளர்கள் பந்து வீசியும், நங்கூரம் போல் நிலைத்து நின்ற கவாஜாவை வீழ்த்த முடியவில்லை. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழந்து, 255 ரன்கள் சேர்த்து வழுவான நிலையில் இருந்தது. முதல் நாளே கவாஜா தனது சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். இந்த சதம் தான் இந்த டெஸ்ட் தொடர் வரிசையில் ஆஸ்திரேலியா சார்பில் அடிக்கப்பட்ட முதல் சதமாக பதிவாகியுள்ளது. முதல் நாள் ஆட்ட முடிவில் கவஜாவும் கேம்ரூன் கீரீனும் களத்தில் இருந்தனர். கீரீன் 49 ரன்கள் எடுத்து இருந்தார். 

 

அதன் பின்னர் இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி மேலும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா 378 ரன்களில் இருந்த போது சதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்த இளம் நாயகன் கேம்ரூன் கீரின் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 170 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் அலெக்ஸ் கேரியும், மிட்ஷெல் ஸ்டார்க் இருவரும் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேற ஆட்டம் இந்தியா கட்டுக்குள் வருவதாக இருந்தது. ஆனால், கவாஜா நிலைத்து நின்று விளையாடி இரட்டை சதத்தினை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தார். ஒருவழியாக அவரை அக்‌ஷர் பட்டேல் 180 ரன்களில் எல்.பி.டபள்யூ முறையில் அவுட் ஆக்கி வெளியேற்றினார். ஆனால் அதன் பின்னர் கைகோர்த்த மார்ஃபியும் நாதன் லைனும் ஆட்டத்தினை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இவர்களை  என்ன செய்வது என தெரியாத இந்திய பவுலர்கள் மீண்டும் தலைசுற்றி நின்றனர்.  சிறிது நேரம் நிலைத்த இந்த பார்ட்னர் ஷிப் ஆஸ்திரேலிய அணியை 500 ரன்களை எட்டவைத்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைத்த அஸ்வின், இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸை 480 ரன்களுக்கு முடிக்க வைத்தார். இந்தியா சார்பில், அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.  இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி மொத்தம் 63 பவுண்ட்டரிகளை விரட்டி உள்ளது. ஆனால், ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.