உலககோப்பையில் குரூப் 2 பிரிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் தங்களது வாழ்வா? சாவா? ஆட்டத்தில் துபாய் மைதானத்தில் மோதி வருகின்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், புவனேஷ்குமார் நீக்கப்பட்டு இஷான்கிஷானும், ஷர்துல் தாக்கூரும் அணியில் சேர்க்கப்பட்டனர். யாருமே எதிர்பார்க்காத வகையில் இஷான்கிஷானும், கே.எல்.ராகுலும் ஆட்டத்தை தொடங்கினர்.


மூன்றாவது ஓவரில் பவுண்டரி அடித்து அதிரடியைத் தொடங்கிய இஷான்கிஷான் அதே ஓவரிலே சிக்ஸர் அடிக்க முயற்சித்து ட்ரென்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய துணைகேப்டன் ரோகித்சர்மா பவுன்சராக வந்த முதல் பந்தை அடித்தபோது அது கேட்ச்சாக சென்றது. அதிர்ஷ்டவசமாக நியூசிலாந்து வீரர் அந்த கேட்ச்சைத் தவறவிட்டார். இதனால், இந்திய ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.




கே.எல்.ராகுலும், ரோகித் சர்மாவும் ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர். ஆனால், இஷான்கிஷான் ஆட்டமிழந்தது போலவே கே.எல்.ராகுலும் சவுதி பந்தில் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால், பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியும், துணைகேப்டன் ரோகித் சர்மாவும் பொறுப்புடன் ஆடத் தொடங்கினர். ஆனால், ரோகித் சர்மா 14 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 14 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால், இந்திய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்களை மட்டுமே எடுத்தது.




இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கையான விராட்கோலி அதிரடி ஆட்டத்தை காட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில், விராட்கோலி 17 பந்தில் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சோதி பந்தில் வெளியேறினார். 48 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய ரசிகர்கள் மைதானத்தில் சோகத்தில் மூழ்கினர். அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டயாவும், ரிஷப் பண்டும் மிகவும் நிதானமாகவே ஆடினர். மிகவும் நிதானமாக ஆடிய ரிஷப்பண்ட் 19 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் மிலென் பந்தில் போல்டானார். இதனால், இந்திய அணி 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. 15 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்தது.


5.1 ஓவர்களுக்கு பிறகு 73 பந்துகளுக்கு பிறகு 17வது ஓவர் முடிவில் இந்திய அணி பவுண்டரி அடித்தது. 18 ஓவர்கள் முடிவில்தான் இந்திய அணி 94 ரன்களையே எடுத்தது. நீண்டநேரமாக களத்தில் நின்ற ஹர்திக் பாண்ட்யா 24 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் ஷர்துல் தாக்கூரும் டக் அவுட்டாகினர். இந்திய அணி 19.1 ஓவர்களில்தான் 100வது ரன்னையே அடித்தது. கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா அடித்த சிக்ஸர் உதவியுடன் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.




இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 19 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்தார். போல்ட் 3 விக்கெட்டுகளையும், சோதி 2 விக்கெட்டுகளையும், மிலென் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண


                                     ..