டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனக்கு கொடுத்த வாக்கை காப்பற்றத் தவறியதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


ஐபிஎல்:



தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடுவதற்கு முன்னதாக, முதல் மூன்று சீசன்களிலும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார்.  பின்னர், அவர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். களத்தில் இவரும் விராட் கோலியும் விளையாடுவதை பார்ப்பதற்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது.


கொடுத்த வாக்கை காப்பாற்றாத டெல்லி அணி:


இதனிடையே, வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள சூழலில்,  டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனக்கு கொடுத்த வாக்கை காப்பற்றத் தவறியதாக ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.


இது தொடர்பாக பேசிய அவர், ”நான் கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது நிர்வாகத்தின் தரப்பிலிருந்து அடுத்த சீசனுக்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் உங்களைத் தக்கவைக்கப் போகிறோம்" என்றார்கள்.


அருகே இருந்த வார்னர்:


அந்த சந்திப்பின்போது டேவிட் வார்னர் எனக்கு அருகே அமர்ந்திருந்தார். ஆனால், ஒரு வாரத்துக்குப் பிறகு நான் அணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக வந்த அறிவிப்பைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அந்த அறிவிப்பு எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்தக் காலக்கட்டத்தில் பெரிதாக தகவல் தொடர்பு வளர்ச்சி என்பது கிடையாது.


இருந்தும், அந்த அறிவிப்பு எனக்கு நல்ல உணர்வுகளைக் கொடுக்கவில்லை. நான் அந்த ஆண்டு (2010) ஐபிஎல் சீசனில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தேன். அதனால், எனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சிறிது பதற்றமாக இருந்தேன்” என்றார்.


நன்றாக விளையாடினேன்:


தொடர்ந்து பேசிய அவர், “நிறைய சந்தேகங்கள் என்னைத் தொற்றிக் கொண்டது. ஆனால், சர்வதேச போட்டிகளில் அப்போது நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டேன். அது எனது கிரிக்கெட் பயணத்தை எப்போதும் நினைவுகூறும் விதமாக மாற்றியது” என்று தெரிவித்துள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.


மேலும் படிக்க: India vs South Africa: டி20 போட்டிக்கு கேப்டனாகும் ரோகித்.. ஒருநாள் போட்டிக்கு கே.எல். ராகுல்? விவரம் இதோ!


மேலும் படிக்க: IND vs AUS 4th T20: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா... சமன் செய்யுமா ஆஸ்திரேலியா! வெற்றி வாய்ப்பு யாருக்கு?