இந்திய அணி வீரர் சூர்யகுமார் பேட்டிங் ஆர்டரில் 5ம் நிலை வீரராக உள்ளார். இது குறித்து அவர் அளித்தப் பேட்டியில் நான் இந்திய அணிக்காக விளையாடுகிறேன். அதில் பேட்டிங் ஆர்டரில் 5வது இடத்தில் இருந்தால் என்ன? இல்லை வரிசையில் வேறு எந்த இடத்திலும் இருந்தால் தான் என்ன? என்று கூறியுள்ளார்.


அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


 "நான் இந்திய அணிக்காக விளையாடுகிறேன். அதில் பேட்டிங் ஆர்டரில் 5வது இடத்தில் இருந்தால் என்ன? இல்லை வரிசையில் வேறு எந்த இடத்திலும் இருந்தால் தான் என்ன?


நான் எதற்கும் வளைந்து கொடுத்து போகும் தன்மையுடவன். எனது அணி நிர்வாகம் எனக்காக என்ன தேர்வு செய்து வைக்கிறதோ அதை அப்படியே பின்பற்றுவேன். நான் 3, 4, 5 ஆகிய ஆர்டரில் பேட் செய்துள்ளேன். அதில் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. நான் போட்டிகளுக்கு முன்னர் மிக அதிகமாக பயிற்சிகளை மேற்கொள்வேன். அணியில் எனக்கு எப்போதாவது பவுலிங் வாய்ப்பு கிடைத்தால். நிச்சயமாக அதை மகிழ்ச்சியுடன் ஏற்பேன். அணி நிர்வாகம் என்னை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். முதல் போட்டியில் அணியின் பேட்டிங் எப்படி இருந்ததோ அதேபோலத்தான் அடுத்தடுத்த போட்டிகளிலும் இருக்கப் போகிறது. நாங்கள் எளிமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அந்த ஆட்டத்தில் எங்கள் பேட்டிங்கின் டெம்போ, தாக்கம் ஆகச்சிறப்பாக இருந்ததாகக் கூறப்பட்டது.


ஒருவேளை அடுத்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால் நாங்கள் நல்ல ஸ்கோரை எடுப்போம். அடுத்துவரும் இலங்கை டெஸ்ட் போட்டிக்கு நான் தேர்வு செய்யப்படாவிட்டால் மும்பை அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவேன். எனக்கு ரஞ்சிக்கோப்பை விளையாடுவது பிடிக்கும். அதேபோல் டெஸ்ட் விளையாட வேண்டும் என்பதிலும் எனக்கு அதீத ஆசை உண்டு. இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாடும் நாட்களை எதிர்நோக்கியுள்ளேன்" இவ்வாறு சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.


வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிப்ரவரி 6ல் தொடங்கியது.


முதலில் பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, 3வது ஓவரிலேயே விக்கெட் சரிந்தது. இதனால், 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. 177 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் பேட் செய்யத் தொடங்கிய இந்திய அணி, 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


நாளை, 2வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. அதிலும் வென்று தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.