இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முக்கியமான கட்டத்தில் மன்கட் முறையில் அவுட் ஆகிய தீப்தி ஷர்மாவிற்கும், இந்திய அணிக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல குரல்கள் வந்துகொண்டிருக்க, இதில் முன்னோடியான அஸ்வின் கருத்து தற்போது வைரலாகி வருகிறது. 


இந்தியா இங்கிலாந்து கடைசி ஒருநாள்


இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக மன்கட் முறை இருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 169 ரன்கள் குவித்த நிலையில்,  இங்கிலாந்து அணி 118 ரன்கள் எடுப்பதற்கும் 9 விக்கெட்களை இழந்தது. கடைசி விக்கெட்டை விடாமல் சார்லோட் டீன் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென இருந்த நிலையில் நிறைய பந்துகள் கைவசம் இருந்த நிலையில் இந்தியா விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறியது. அந்த நேரத்தில் மன்கட் முறையில் தீப்தி ஷர்மாவால் சார்லோட் டீன் ஆட்டமிழந்தார். 



மன்கட் ரன் அவுட்


தீப்தி ஷர்மாவின் இந்த ரன் அவுட்டை முன்னாள் மற்றும் தற்போதைய இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பல கிரிக்கெட் ரசுகர்களும் அதனை கேலி செய்து வருகின்றனர். இப்படி அவுட் ஆகும் முறை பொதுவாக 'மன்கட்' என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து கேப்டன் எமி ஜோன்ஸ் போட்டியிலேயே இதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், அவுட் ஆன சார்லோட் டீன் மைதானத்திலேயே கண்ணீர் விட்டது அனைவரையும் உருக்கியது.


தொடர்புடைய செய்திகள்: சிம்புவுக்கு சொகுசு கார்...! கௌதம்மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு..! விடிகே வெற்றி மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் அன்பளிப்பு


கேப்டன் ஆதரவு


இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது தீப்திக்கு முழு ஆதரவு அளித்துள்ளார். ஏனெனில் அவர் பந்துவீசும் முன் மன்கட் செய்யுமாறு சைகை செய்ததே அவர்தான். அதற்கான வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. தீப்தி பந்து வீசும் போது, சார்லோட் கிரீஸை விட்டு வெளியே வந்ததும், உடனே தீப்தி ரன் அவுட் செய்தார். இதனை சரிபார்க்க ஆன்பீல்ட் அம்பயர்கள் மூன்றாம் நடுவருக்கு அனுப்பினர். மூன்றாம் நடுவர் முடிவில் அவுட் என உறுதி செய்தார்.







அஸ்வின் ட்வீட்


சமீபத்தில் ஐசிசி மாற்றிய புதிய விதிமுறைகளில் மன்கட் ரன் அவுட் முறை செல்லும் என்று கூறி இருந்தது என்று பலர் வாதிட்டு வருகின்றனர்.  ஐபிஎல் போட்டியில் கூட அஸ்வின் இதே முறையில் ஜோஸ் பட்லரை ரன் அவுட் செய்து இருந்தார். அந்த சமயத்தில் அது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது விதிமுறைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.  தீப்திக்கு இந்திய ரசிகர்களிலும் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்ற நிலையில் திடீரென அஸ்வினும் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தார். இதற்கு பதிலளித்த அஸ்வின், "எதற்காக இன்று அஸ்வினை ட்ரெண்ட் செய்கிறீர்கள். இன்றைய இரவின் பவுலிங் ஹீரோ தீப்தி ஷர்மா" என்று கூறி அவரை டேக் செய்து இருந்தார். அவரை ஹீரோ என்று கூறியதன் மூலம் அஸ்வின் அவரை சப்போர்ட் செய்கிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இதனிடையே இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் ப்ராட், சாம் பில்லிங்ஸ், பீட்டர்சன் போன்ற வீரர்கள் தங்களது தொடர்ச்சியான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.