டிஎன்பிஎல் எட்டாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி, ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 



முதல் இன்னிங்ஸ்: 


முதலில் பேட்டிங்கை தொடங்கிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் தொடக்க வீரரான சந்தோஷ் குமார் 8 ரன்களுக்கு ஆட்டம் நடந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபரஜீத் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். சேப்பா அணியன் மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் பொறுமையாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் இணைந்த பிரதோஷ் ரஞ்சன் பால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


இருவரும் இணைந்து 33 பந்துகளில் 50 ரன்கள் அடித்தனர். ஜெகதீசன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டரியல் 4 ரன்களுக்கும், சித்தார்த் 23 ரன்களுக்கும், அபிஷேக் தன்வர் 2 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டை பறி கொடுத்தனர். ஆனால் பொறுமையாக விளையாடிய பிரதோஷ் ரஞ்சன் பால் 39 ரன்களில் அரை சதம் அடித்தார். இது அவரது மூன்றாவது டிஎன்பிஎல் அரை சதம் ஆகும்.


ஆட்டத்தின் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரதோஷ் ரஞ்சன் பால் 46 பந்துகளுக்கு 67 ரன்கள் எடுத்து இருந்தார். மற்றொரு முனையில் ஷாஜகான் 6 பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்த ஆட்டம் இழக்காமல் இருந்தார். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 157 ரங்களை எடுத்து இருந்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய முகமது அலி 3 விக்கெட்டுகள் எடுத்தார். நடராஜன், புவனேஸ்வர் மற்றும் மதிவாணன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.



இரண்டாவது இன்னிங்ஸ்:


158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க வீரர் ராதாகிருஷ்ணன் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.


அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய சாத்விக் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். தொடக்க வீரர் துஷார் ரஹீஜா நிதானமாக விளையாடி 20 ரன்களை சேர்த்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய அனிருத் 7 ரன்களுக்கும், முகமது அலி 12 ரன்னுக்கும், கேப்டன் விஜய் சங்கர் 4 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய கணேஷ் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் அரை சதம் அடித்தார்.


இது அவரது முதல் டிஎன்பிஎல் அரை சதம் ஆகும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கணேஷ் 35 பந்துகளில் 61 ரன்களை எடுத்து இறுதி ஓவரில் ரன் அவுட் ஆனார். ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய பெரியசாமி இரண்டு விக்கெட் கைப்பற்றினார். டரியல், அபிஷேக், அஸ்வின் கிரிஸ், ரஹில் ஷா, சூர்யா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வெற்றி பெற்றது. சேப்பாக் அணியில் சிறப்பாக பேட்டிங் செய்து 67 ரன்களை குவித்த பிரதோஷ் ரஞ்சன் பாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.