இந்திய கிரிக்கெட் சம்மேளனம் உடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக, பைஜுஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.


பைஜுஸ் நிறுவனம்:


2011-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான பைஜூஸ், அதன் கற்றல் செயலியை 2015 இல் அறிமுகப்படுத்தியது. குறுகிய காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கல்வி தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுத்தது.  ஷாருக்கானை தொடர்ந்து ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகளுக்கு நடுவே, பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸியையும் தங்களது நிறுவன விளம்பர தூதராக அறிவித்து ஆச்சரியப்படுத்தியது.


பிசிசிஐ உடன் ஒப்பந்தம்:


இதனிடையே, 2019ம் ஆண்டு வரையில் இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை ஸ்பான்சராக கொண்டிருந்த உரிமையை, ஓப்போ நிறுவனம் பைஜுசிடம் விற்பனை செய்தது.  கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற இலங்கை இந்தியா இடையிலான போட்டிகளுக்குப் பிறகு, பிசிசிஐ மற்றும் பைஜூசுக்கு இடையேயான ஒப்பந்தம் முடிவடைந்தது. அதைதொடர்ந்து, அந்த ஒப்பந்தமானது 18 மாதங்களுக்கு சுமார் 55 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.439 கோடிக்கு நீட்டிக்கப்பட்டது.


பிசிசிஐ வைத்த கோரிக்கை:


இந்நிலையில், பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து பைஜுஸ் விலக உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒப்பந்தத்தை நிறுத்துமாறு, 4.11.2022 அன்று பி.சி.சி.ஐ.க்கு பைஜுஸ் நிறுவனத்திடமிருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதேநேரம், பைஜூஸுடன் நாங்கள் நடத்திய விவாதங்களின்படி, தற்போதைய நிலையிலேயே தொடருமாறும், குறைந்தபட்சம் 31.3.2023 வரை ஸ்பான்சர்ஷிப்பைத்  தொடருமாறும் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


”ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது”


இந்த சூழலில்தான், பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவதில்லை என, பைஜுஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ரவீந்திரன் அறிவித்துள்ளார். தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், “பிசிசிஐ, ஐசிசி மற்றும் பிஃபா ஆகிய அமைப்புகள் உடனான எங்களது ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவதில்லை.


அடுத்த சில மாதங்களில் எங்களது விளம்பரங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதை உங்களால் காண முடியும். பைஜுஸ் நிறுவனம் தேவையான அளவிற்கு பொதுமக்களிடையே விளம்பரத்தை பெற்றுவிட்டது. நடப்பு காலாண்டிற்குள் வருவாயில் லாபம் காணும் நோக்கில், பல்வேறு செலவினங்களை குறைக்க திட்டமிட்டுள்ளோம்” என, விளக்கமளித்துள்ளார்.


நஷ்டத்தில் இயங்கும் பைஜுஸ்:


கடந்த செப்டம்பர் மாதம் வருவாய் தொடர்பான நிதி அறிக்கையை வெளியிட்ட பைஜுஸ் நிறுவனம், வருவாய் ரூ.2,428 கோடியாக உள்ள சூழலில், ரூ.4,588 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மற்றொரு  ஸ்பான்சர் நிறுவனமான எம்பிஎல் நிறுவனமும் தனது ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்திடமும் பிசிசிஐ தரப்பு, குறைந்தது வரும் மார்ச் மாதம் இறுதிவரை அதாவது 31.3.2023 வரை ஸ்பான்சர்ஷிப்பை தொடர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.