இந்தியா - நியூசிலாந்து:


நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது தற்போது தவறுக்கு காரணமாக மாறி இருக்கிறது.


தவறு செய்து விட்டேன்:


இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித்ஷர்மா பேசியிருக்கிறார். அதில், "ஆடுகளத்தில் புற்கள் பெரிய அளவில் இல்லை. இதனால் பந்து போட்டியின் சில பகுதியில் கொஞ்சம் ஸ்விங்க ஆகும். அதன் பிறகு சுழற் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நினைத்தேன். எப்போதெல்லாம் நாங்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறோமோ, அப்போதெல்லாம் முதல் ஸ்சேஷன் என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் அதன் பிறகு சுழற் பந்துவீச்சாளர்கள் போட்டிக்குள் வந்து விடுவார்கள்.


இதன் காரணமாகத்தான் குல்தீப் யாதவை நாங்கள் இன்று போட்டியில் சேர்த்தோம். ஏனென்றால் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் கூட குல்தீப் யாதவால் விக்கெட் எடுக்க முடியும். நாங்கள் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆடுகளம் குறித்து நான் சரியாக கணிக்காமல் தவறிவிட்டேன். இதன் காரணமாக தான் இன்று மோசமான நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இது என்னுடைய தவறுதான். வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்தது உண்மைதான்.


அதற்காக 46 ரன்களில் ஆட்டம் இருந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது போன்ற ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு பிளான் இருக்கும். ஆனால் இன்று எந்த பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பிளானை நடைமுறைப்படுத்த தவறி விட்டார்கள். இன்று எங்களுக்கு ஒரு மோசமான நாளாக அமைந்து விட்டது. தற்போது எங்களுக்கு மிகப்பெரிய சவால்கள் இருக்கின்றது. அதை நாங்கள் எப்படி எதிர்கொள்வோம் என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்"என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா