ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது.


ஆசியக்கோப்பை கிரிக்கெட்:


ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது இன்று தொடங்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும்,  ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் செயலியிலும் இலவசமாக கண்டு களிக்கலாம்.


இரண்டு நாடுகளில் தொடர்..!


முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர், இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் ஒரு சிறு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரண்டு நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறுகிறது. ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், அந்த போட்டியும் இலங்கையிலேயே நடைபெறும். 


இரண்டு சுற்றுகள்:


இந்த தொடரில்  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஒரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.


அதில் ரவுண்ட் ராபின் முறைப்படி போட்டிகள் நடைபெறும். அதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. முகல் நகரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.


இந்திய அணி:


இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில், வரும் 2ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.


உலகக்கோப்பைக்கு தயாராக ஏதுவாக இந்த தொடர் அமைந்து உள்ளதால், இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோரின் செயல்பாட்டின் மீதும் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், அவர்கள் இந்த தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்


யார் முன்னிலை:


ஆசியாவில் இடம்பெற்றுள்ள அணிகளை கொண்டு நடத்தப்படும் இந்த தொடர் கடந்த 1984ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முதலில் 50 ஓவர்கள் போட்டியாக நடத்தப்பட்ட இந்த தொடர், டி-20 பிரபலமானதை தொடர்ந்து டி-20 வகையிலும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இந்த தொடர் நடைபெறுகிறது. இதுவரை 14 முறை ஆசியக்கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக இந்திய அணி 7 முறையும், இலங்கை அணி 6 முறையும் இந்த கோப்பயை வென்றுள்ளது.