ஆசிய கோப்பை தொடரில் பி பிரிவில் இந்தியா ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது அணியாக பாகிஸ்தான் அல்லது ஹாங்காங் அணிகளில் ஒரு அணி தகுதி பெற முடியும். இந்தச் சூழலில் இன்று கடைசி குரூப் போட்டி நடைபெறுகிறது. அதில் பாகிஸ்தான் -ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். 


அதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3வது ஓவரில் 9 ரன்கள் எடுத்திருந்த போது ஹாங்காங் பந்துவீச்சாளர் இஹ்சான் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரும் ஃபாக்கர் ஜமானும் ஜோடி சேர்ந்து 2 விக்கெட்டிற்கு 117 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ஃபாக்கர் ஜமான் 41 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளின் உதவியுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 


அவரைத் தொடர்ந்து வந்த குஷ்தில் அதிரடி காட்ட தொடங்கினார். அவர் அதிரடியாக 5 சிக்சர்கள் விளாசி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்தார். 15 பந்துகளில் அவர் 35 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக 20 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் ஒரு சிக்சர் 6 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 78* ரன்கள் எடுத்திருந்தார். 


193 ரன்கள் எடுத்தால் கடின இலக்குடன் ஹாங்காங் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் நிஜாகத் கான் மற்றும் யாசிம் முர்தாசா களமிறங்கினர். கேப்டன் நிஜாகத் கான் 8 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, அவரை தொடர்ந்து பின் வரிசை வீரர்களின் விக்கெட்கள் மளமளவென சரிய தொடங்கியது. 30 ரன்களுக்குள்ளே 5 விக்கெட் சரிய, தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சால் ஹாங்காங் அணியின் பேட்டிங் வரிசை படுக்க தொடங்கியது. 






பாகிஸ்தான் அணியின் தொடர் சிறப்பான பந்துவீச்சால் ஹாங்காங் அணி 10. 4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 38 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது. ஹாங்காங் அணியில் அதிகபட்சமாகவே கேப்டன் நிஜாகத் கான் 8 ரன்கள் எடுத்திருந்தார்.  பாகிஸ்தான் அணி சார்பில் சதாப் கான் 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். 


இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று, வருகிற ஞாயிற்று கிழமை இந்திய அணியை எதிர்கொள்கிறது.