உலக கிரிக்கெட் அரங்கில் தவிர்க்க முடியாத அதிரடி பேட்ஸ்மேன்களில் முதன்மையானவர் ரோகித்சர்மா. ஒருநாள் போட்டியில் 3 இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற யாரும் தொட முடியாத சாதனையை தன்வசம் வைத்துள்ள ரோகித்சர்மா, ஐ.பி.எல். தொடரிலும் வெற்றிகரமான கேப்டனாக உலா வருகிறார்.


கேப்டன் ரோகித்சர்மா:


இந்த நிலையில், ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பு வகிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இனிமேல் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ரோகித்சர்மா ரசிகர்களுக்கும், மும்பை ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஐ.பி.எல். தொடரில் தனது சகாப்தத்தை தொடங்கியவரின் திறமையை கண்டு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தன்பக்கம் இழுத்துக் கொண்டது. அம்பானியின் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். தொடங்கப்பட்ட முதல் 2008ம் ஆண்டு முதல் கிரிக்கெட் ஆடினாலும், சச்சின், ஹர்பஜன், பாண்டிங் என ஜாம்பவான்கள் கேப்டனாக இருந்தும் அவர்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அப்போதுதான், 2013ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் பாதியிலே கேப்டனாக பாண்டிங் கேப்டன்சியை ரோகித்சர்மாவிடம் ஒப்படைத்தார்.


சாம்பியன் கேப்டன்:


அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய பொற்காலம் பிறந்தது என்றே கூறலாம், அந்த தொடரில் முதல் 5 போட்டிகளில் தோற்ற மும்பை அணி அந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, இறுதிப்போட்டியில் சென்னையை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.


அதுவரை சாம்பியன் மகுடமே சூடாத மும்பைக்கு அந்த மகுடத்தைங  சூட்டி அழகு பார்த்தவர் ரோகித்சர்மா. அடுத்த தொடர் முதல் ரோகித்சர்மா புதிய அவதாரம் எடுத்தார் என்றே சொல்லலாம். அதுவரை ஐ.பி.எல். தொடரில் ஜாம்பவனாக உலா வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமபலமான அணியாகவும், சவாலான அணியாகவும் மும்பையை மாற்றிக் காட்டினார் ரோகித். அதற்கு அவர் பெற்றுக் கொடுத்த சாம்பியன் பட்டங்களே சான்றாகும்.


தோனிக்கே சவால் தந்தவர்:


ரோகித்சர்மா தலைமையில் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, இஷன் கிஷன், பும்ரா, போல்ட் என நட்சத்திர பட்டாளங்கள் புடைசூழ ஐ.பி.எல். ஆடும் அத்தனை அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தது. ஐ.பி.எல். தொடரின் ராஜாவாக உலா வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, 2020ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.


இதில், 2013, 2015, 2019 ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ரோகித்சர்மா கைப்பற்றினார். கேப்டன்சி என்றாலே ரோகித்சர்மா என்று கூறும் அளவிற்கு ஐ.பி.எல். தொடரில் அபாரமாக அவர் செயல்பட்டதைத் தொடர்ந்து, அவரை இந்திய அணிக்கான அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக பி.சி.சி.ஐ. நியமித்தது.


ஆனால், கடந்த 3 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதும், மிகவும் மோசமான தோல்வியை அவர்கள் சந்தித்ததும் ரசிகர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், நடப்பு உலகக்கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்லாவிட்டாலும் ரோகித்சர்மா கேப்டன்சி அபாரமான பேட்டிங்கை வௌிப்படுத்தினார்.


முடிவுக்கு வந்த கேப்டன்சி:


இந்த சூழலில், திடீரென அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ள ரோகித்சர்மா இதுவரை 243 போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 1 சதம், 42 அரைசதம் உள்பட 6 ஆயிரத்து 211 ரன்களை குவித்துள்ளார். இதில் சிக்ஸர் மட்டும் 257 ஆகும்.


ஐ.பி.எல். தொடரில் கேப்டன்சியின் மன்னனாகவும், சிக்ஸ் அடிப்பதில் அசுரனாகவும் திகழ்ந்த ரோகித் சர்மாவின் 10 ஆண்டுகால ஐ.பி.எல். கேப்டன்சி முடிவுக்கு வந்திருப்பது வருத்தமான ஒன்றே ஆகும். இருப்பினும் ஒரு வீரராக அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அசத்தலாக ஆடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.