மெட்ராஸ் என்பது வெறும் ஒரு ஊர் அல்ல அது ஒரு உணர்வு என்ற கூற்று உள்ளது. அந்த மெட்ராஸ் சிங்கார சென்னையாக மாறியது. அப்படி பெயரில் மட்டுமே மாறியதே தவிரே தன்னுடைய வந்தாரை வாழவைக்கும் குணத்தை எப்போதும் அது மாற்றியதே இல்லை. அந்தவகையில் இன்று 382ஆவது சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று முதலே சென்னை மாநாகராட்சியின் அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உலகத்திலேயே மிகவும் பழமைவாய்ந்த இரண்டாவது மாநகராட்சி சென்னை மாநாகராட்சி ஆகும். இத்தகைய சிறப்பு சென்னைக்கு உண்டு. 


இந்நிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டப்பட்டுள்ளது. அதில் சென்னை அணியின் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் சென்னை தமிழில் பேசுகின்றனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை தினத்திற்கான வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஷாட் மச்சி, ஊர்ல சொல்லிடு வந்திட்டியா, போலாம் ரைட், ஸ்பெரிங் போடுவோமா, ப்ரீயாவிடு மாமே போன்ற வசனங்களை அவர்கள் அந்த வீடியோவில் பேசுகின்றனர். 


 






இந்த வீடியோவை பலரும் ரசித்து வருகின்றனர். தற்போது வரை இந்த வீடியோவை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் பலரும் லைக் செய்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதிக்காக சென்னை அணி தற்போது யுஏஇயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னையின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ராயுடு,உத்தப்பா உள்ளிட்ட பலரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 


ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் சென்னை அணி தன்னுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்பின்னர் பெங்களூரு(செப்டம்பர் 24), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(செப்டம்பர் 26), சன்ரைசர்ஸ்(செப்டம்பர் 30), ராஜஸ்தான்(அக்டோபர் 2), டெல்லி(அக்டோபர் 4), பஞ்சாப் கிங்ஸ்(அக்டோபர் 7) ஆகிய போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி சென்னை அணிக்கு நன்றாகவே அமைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி மற்றும் 2 தோல்விகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:அன்று பேப்பர் பையன்.. இன்று தங்க மகன்.. இது மாரியப்பன் தங்கவேலுவின் பயணம்!